திண்டுக்கல் சீனிவாசன் சரியாகத்தான் சொல்லியுள்ளார்.. ஆனால்!
சென்னை: எப்பவுமே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தப்பாதான் பேசுவார்னு நினைச்சிடாதீங்க. அவர் பேசுவதில் பாதி உண்மையும் பாதி தவறும் இருக்கும். அதற்கு இந்த சம்பவமே சான்றாகும்.
கஜா புயல் பாதித்த இடங்களில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக சில கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
அப்பகுதிகளில் படிப்படியாக மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
பயன்படுத்த வேண்டும்
இந்நிலையில் வேதாரண்யத்தில் மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ் மணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இதுபோல் புயல் பாதித்த இடங்களில் மின் கம்பங்களை நட விமானங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.
கண்டுபிடியுங்கள்
இந்த தகவலை கேட்டவுடன் அவருடன் இருந்த ஓ.எஸ்.மணியனும் மின்துறை அதிகாரிகளும் ஆடி போய்விட்டனர். அப்போது ஓ.எஸ் மணியன் இதற்கு எதிர்கருத்தை தெரிவித்தபோதும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமானம் மூலம் மின்கம்பங்களை நடும் தொழில்நுட்பத்தை கண்டுபிடியுங்கள் என்றார்.
வாடிக்கை
இதை கேட்டு பலருக்கு சிரிப்பு வந்திருக்கும். ஆனால் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதில் பாதி சரிதான். அதாவது புயல் பாதித்த பகுதிகள், சாலை மார்க்கமாக செல்ல இயலாத பகுதிகள், மலைபாங்கான இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் மின்கம்பங்கள், எச்டி பவர் போல்ஸ் ஆகியன கொண்டு வரப்பட்டு நடுவது வாடிக்கையான ஒன்றுதான்.
இந்தியாவில் இல்லை
இது போன்ற வசதிகள் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்பதற்கு பதிலாக விமானங்கள் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும் என அமைச்சர் கேட்டுவிட்டார். சரி விடுங்க... எல்லாருக்கும் டங்க் சிலிப்பாவது இயற்கைதானே.