விசாரணையில் இருக்கும்போதே ஆட்கொணர்வு மனு... வைகுண்டராஜன் மீது கடுப்பான ஐடி அதிகாரிகள்!
Recommended Video
சென்னை : விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜனின் வீடு மற்றும் அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் வைகுண்டராஜன் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால் அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.
விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனின் வீடு, நெல்லை மாவட்டம் திசையன்விளை, தூத்துக்குடி மற்றும் சென்னை நுங்கம்பாக்கம், திருவான்மியூரில் உள்ள அலுவலகங்கள் உள்ளிட்ட 100 இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில் வி.வி மினரல்ஸ் வரி கடந்த 3 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருவதாக தெரிகிறது.
விவி மினரல்ஸ் நிறுவனத்தில் சர்வதேச பணப்பரிவர்த்தனைகள், மணல் மற்றும் கிரானைட் ஏற்றுமதி ஆவணங்கள் என பலவற்றையும் அதிகாரிகள் தோண்டித் துருவி வருகின்றனர். தொழிலதிபர் வைகுண்டராஜனிடமும் அதிகாரிகள் அவருடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[சோதனை முடியும் வரை வைகுண்டராஜனை வெளியே விட முடியாது.. வருமான வரித்துறை]
ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு
கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை மற்றும் வைகுண்டராஜனிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வைகுண்டராஜனை வருமானவரித்துறையினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அடைத்து வைத்துள்ளனர்
பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்காமல் வைகுண்டராஜனை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளதாக நீதிபதிகளிடம் வைகுண்டராஜன் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். இந்த வழக்கு விசாரணையில் வருமான வரித் துறையை சேர்ந்த விசாரணை அதிகாரி அருண்ராஜ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வருமானவரி சோதனை குறித்து விளக்கம் அளித்தார்.
விதிமிறல் விசாரணை இல்லை
வைகுண்டராஜனிடம் விதிகளுக்கு உட்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் மற்ற வருமான வரி சோதனையின் போது பின்பற்றும் நடைமுறைகளே தற்போதும் பின்பற்றப்படுவதாகும் அருண்ராஜ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். நாளை காலைக்குள் அவரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை அதிகாரி நீதிபதியிடம் கூறினார் வைகுண்டராஜன் உணவு மற்றும் மருந்து எடுத்துக் கொள்ள எந்த தடையையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடும்பத்தினர் செல்லலாம்
இந்நிலையில் குடும்பத்தினரை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று வைகுண்டராஜன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனையடுத்து வைகுண்டராஜனின் குடும்பத்தினரை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க வருமானவரித்துறையினர் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எனினும் விசாரணையில் வைகுண்டராஜன் குடும்பத்தினர் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கு போட திட்டம்
வருமான வரி துறை விசாரணையில் இருக்கும்போதே உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது வைகுண்டராஜன் மட்டுமே என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கடும் கோபம் அடைந்துள்ளனர். அடுத்தகட்டமாக பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வைகுண்டராஜன் மீது வழக்கு தொடரவும் வருமான வரி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.