பேஸ்புக்கில் புகைப்படங்களுடன் வரும் பதிவுகளை பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது!
சென்னை :பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இப்போதெல்லாம் புகைப்படங்களும் வரும் பதிவுகளை பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது. பிறந்த நாள் பதிவுகளாக இருக்கக்கூடாதா என்று நெஞ்சம் பலமுறை கேட்டிருக்கிறது. ஏனெனில் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று கூறியே பல பதிவுகளை பார்க்க முடிகிறது.
கொரோனா உச்சம் பெற தொடங்கியது சரியாக மார்ச் 28ம் தேதி என்று நினைக்கிறேன். அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தொடத்தொடங்கியது.
கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தையும் மோசமாக தாக்க தொடங்கிவிட்டது என்பது அப்போது மனம் சொல்லியது. பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்ததால் எந்த கட்சியும் லாக்டவுனை ஆதரித்து கருத்து தெரிவிக்கவில்லை. தேர்தல் நடந்த நாள் வரை கொரோனா பாதிப்பு தினசரி 8ஆயிரம் என்கிற அளவில் இருந்தது. அதன்பிறகு தான் நிலைமை விபரீதமாக மாறத்தொடங்கியது.
டெக் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம்.. நாட்டைவிட்டு வெளியேறும் பேஸ்புக்?
கொரோனா பரவல்
தேர்தலில் ஓட்டுப்போட வந்த பலரும் அடுத்த இரண்டு நாட்கள் சொந்த ஊரில் பொழுதை கழித்தார்கள். அவர்களில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியே மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியது. 10 ஆயிரத்தை கடந்தது. படிப்படியாக கடந்து அடுத்த இரு வாரங்களில் 20 ஆயிரம் ஆகியது. இப்போது 30 ஆயிரம் என்கிற நிலைக்கு வந்துள்ளது. உயிரிழப்பும் தினசரி 10ல் இருந்து 250 ஐ நெருங்கி உள்ளது
உயிரிழப்பு இல்லை
இப்போது மீண்டும் பேஸ்புக் பதிவை பற்றி பார்ப்போம். கடந்த ஆண்டு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சக பத்திரிக்கையாளர்கள். ஊடகவியலாளர்கள் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் போட்ட பதிவுகளை பார்த்து மிகவும் வருத்தப்பட்டது உண்டு. ஆனால் ஒரு சிலரை தவிர யாரும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. உயிரிழப்பை சந்திக்கவில்லை.
புகைப்படங்கள் அதிகம்
ஆனால் இந்த முறை அப்படி இல்லை. சக நண்பர்கள், உறவினர்கள், நட்சத்திரங்கள் என யார் பதிவிலும் நண்பர் இறந்துவிட்டார், சின்ன வயசுதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துவிட்டார் என்று புகைப்படங்கள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளன. முன்பெல்லாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிதான் புகைப்படங்கள் அதிகம் வரும். அதை பார்த்து சந்தோஷப்படடு வாழ்த்து தெரிவித்த என் கைகள், ஒவ்வொரு பதிவிலும் ஆழ்ந்த இரங்கல், வேதனை, வருத்தம், rip, என்று போடத்தொடங்கிவிட்டது.
பல உறவுகள் பாதிப்பு
யார் பதிவை பார்த்தாலும் கொரோனா, அப்பா இறந்துவிட்டார், அம்மா இறந்துவிட்டார், அண்ணன் இறந்துவிட்டார், அக்கா இறந்துவிட்டார், சித்தி இறந்துவிட்டார், தாத்தா, பாட்டி, சக நண்பனின் தந்தை, என ஒவ்வொரு பதிவிலும் யாராவது ஒருவர் இறந்துவிட்டதாக தினசரி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பேஸ்புக்கை திறக்கவே நெஞ்சும் பதறுகிறது. நெருங்கிய நண்பர்கள், என்னுடன் ஆண்டுக்கணக்கில் வேலை பார்த்தவர்கள் பலரும் உறவுகளை கொரோனாவால் இறந்துவிட்டார்கள் என்பது அவர்களின் பேஸ்புக் பதிவின் மூலம் தெரிகிறது.
கொரோனா தீவிரம்
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் கொரோனாவால் ஒருவர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்களின் மொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. யாராவது ஒருவரை கொரோனா தீவிரமாக பாதித்துவிடுகிறது. சிலரை கொன்று விடுகிறது. பலர் என் தந்தைக்கு, என் அம்மாவிற்கு ஆக்சிஜன் வசதியுடன் சென்னையில் பெட் கிடைப்பது கடினமாக உள்ளது. கோவையில் கிடைக்கவிலலை. சேலத்தில் கிடைக்கவில்லை என்று பதறி போடும் பதிவுகளும் அதிகமாக உள்ளது.
அலட்சியம் அதிகம்
மக்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. உண்மையிலேயே நிலைமை அப்படித்தான் இருக்கிறது. மக்களின் பொருளாதார நிலை கருதி லாக்டவுன் முடிவை கூட அரசு மிகவும் தாமதமாகவே அரசு எடுத்திருக்கிறது. ஆனால் இதை பலரும் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை முககவசம் அணியாமல் பலர் அலட்சியமாக செல்வதை பார்க்க முடிகிறது. கூட்டம் கூட்டமாக கடைகளில் குவிவதை காண முடிகிறது. யாருக்கு கொரோனா இருக்கிறது. யாருக்கு இல்லை என்பதை உறுதி செய்ய முடியாத சூழலில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் கவனமாக இருப்பது மட்டுமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்க உதவும். மற்றபடி எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும், அன்றாட காய்ச்சியாக இருந்தாலும் கொரோனா எல்லாருக்கும ஒரே முடிவைத்தான் தான் தரும்.