எப்போதும் அரசியல் பேசமுடியாது.. விஜயகாந்த் உடல்நிலைதான் முக்கியம்.. சந்திப்பு பற்றி கோயல் விளக்கம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மட்டுமே விசாரித்தோம், கூட்டணி குறித்து பேசவில்லை என்று பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மட்டுமே விசாரித்தோம், கூட்டணி குறித்து பேசவில்லை என்று பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
லோக் சபா தேர்தலுக்கான அதிமுக - பாஜக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பாமக 7 தொகுதியிலும், பாஜக 5 தொகுதியிலும் போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதில்லை தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இது தொடர்பாக அதிமுகவினர் காலையில் தேமுதிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்படிக்கை ஏற்படவில்லை.
அதன்பின் பாஜகவை சேர்ந்த அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தேமுதிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் இதிலும் எந்தவிதமான உடன்படிக்கையும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து தற்போது பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டியளித்துள்ளார்.
அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். பிரதமர் மோடி விஜயகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் விஜயகாந்த் குறித்து விசாரித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின் எந்த அரசியலும் கிடையாது. எப்போதும் எல்லா சந்திப்பிலும் அரசியல் பேச வேண்டியது கிடையாது. மனிததன்மையும் முக்கியம்.
விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மட்டுமே நாங்கள் பேசினோம். விஜயகாந்த் என்பது பழைய நண்பர். அவர் சிறந்த சினிமா நடிகர். நல்ல அரசியல்வாதி.
எங்கள் நட்பும் எங்களுக்கு முக்கியம். இங்கு அரசியல் பேசவில்லை. கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் ஆலோசனை செய்யவில்லை. சந்திப்புகள் அனைத்தும் அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டியதில்லை, என்று கோயல் குறிப்பிட்டார்.