அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ
சென்னை: ரயிலில் புட்போர்டு அடித்துக் கொண்டு பிளாட்பார்மில் காலை உரசிக் கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட அம்பத்தூர் மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இளம் கன்று பயமறியாது என்பது பழமொழி. அதற்கேற்ப பட்டரவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் பயணிப்பதும், ரயில் பிளாட்பார்மில் அரிவாளை கொண்டு உரசுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் கண்டுபிடித்து என்னதான் எச்சரிக்கை செய்தாலும் இவர்கள் அடங்குவதில்லை. இன்று திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் அம்பத்தூர் ஐடிஐ படிக்கும் மாணவர்கள் பயணம் செய்தனர்.
ரயிலுக்குள் இடம் இருந்தும் புட்போர்டு அடித்தபடி அரட்டை அடித்துக் கொண்டே பயணம் செய்தனர். மேலும் ரயில் ஆவடியை அடைந்தது. அப்போது அங்கிருந்து புறப்பட தயாரான போது ஒரு பெட்டியில் தொங்கி கொண்டிருந்த மாணவர்கள் தங்கள் கால்களை கொண்டு பிளாட்பாரத்தில் உரசினர்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகளை வைத்து அவர்கள் அம்பத்தூர் ஐடிஐ படிக்கும் மாணவர்கள் என போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.