இது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை "ஸ்பெஷல் மழை".. வெதர்மேன்
Recommended Video
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் இன்று சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும் தற்போதைய மழை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஸ்பெஷல் மழையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மட்டுமல்லாமல், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரத்திலும் இன்று முதல் நாளை காலை வரை நல்ல மழை பெய்யும் என்றும் சென்னையில் காற்றும் வீசும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னைக்கு வெளியே நிலை கொண்டிருந்த பெரும் மேகக் கூட்டம் தற்போது நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் மழையின் அளவும் அதிகரிக்கும். இன்றைக்குள் காற்றழுத்தம் கரையைக் கடந்து விடும். இந்த மழை நின்று நிதானமாக பெய்யும். சில நேரங்களில் கன மழையாக இருக்கலாம். சில நேரங்களில் மிக கன மழையாக இருக்கலாம்.
[சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் ]
நாளை வரை பெய்யும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் நல்ல மழை கிடைக்கும். எனவே இந்த மழையை மக்கள் வரவேற்கலாம்.
தென் சென்னை - காஞ்சிபுரம்
தென் சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் இது மிக மிக மிக கன மழையாக இருக்கக் கூடும். சில நேரங்களில் அதீத கன மழையாகவும் இது இருக்கலாம். எனினும் மக்கள் பயப்படத் தேவையில்லை.
கடலூருக்கு மட்டும் இல்லை
இந்த காற்றழுத்தமானது புதுச்சேரி - சென்னை இடையே கரையைக் கடக்கும் என்பதால் வட மாவட்டங்கள் முழுவதிலும் நல்ல மழை பெய்யும். அதேசமயம், கடலூருக்கு மழை பெரிதாக இருக்காது.
பலத்த காற்று வீசலாம்
சென்னை புதுச்சேரி இடையே இந்த சமயத்தில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும். பகல் நேரத்தில் காற்று வீசக் கூடும்.
இங்கெல்லாம் நல்ல மழை
தென் சென்னையைப் பொறுத்தவரை அனைத்துப் பகுதிகள், தாம்பரம், காஞ்சிபுரம், ஓரகடம் சுற்றுப் பகுதிகள், கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ஆகிய பகுதிகளில் நல்ல மழை கிடைக்கும் என்று வெதர்மேன் கூறியுள்ளார். தற்போது சென்னையில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.