பாபர் மசூதி விவகாரம்... எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்க வேண்டும் -காதர் மைதீன்
சென்னை: பாபர் மசூதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எப்படி தீர்ப்பு வழங்கினாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மைதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், சமயத் தலைவர்களும் தீர்ப்பு தொடர்பாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மைதீன் விடுத்துள்ள அறிக்கையில்,
கோரிக்கை
பாபர் மசூதி தொடர்பாக உச்சநீதிமன்றம் எந்த வகையில் தீர்ப்பு அளித்தாலும், அதனை சம்பந்தப்பட்ட அனைவரும் முழு மனதோடு ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். நிலம் தொடர்புடைய வழக்கை மதம் தொடர்புடைய வழக்காக மாற்றக் கூடாது என்றும், அது பற்றி ஏற்கனவே மும்பையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரியாதை
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து ஏற்று நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் சமுக நல்லிணக்கத்தை பேணி பாதுகாத்து நிலை நிறுத்த வேண்டும் என காதர்மைதீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்ப்பே இறுதித் தீர்ப்பு என்பதால் அதனை வழக்கிற்கு தொடர்புடையவர்கள் ஏற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதிமுக கூட்ட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவி... போட்டியிட விரும்பும் பாமக?
40 நாள் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் 40 நாட்களாக நடைபெற்ற அயோத்தி வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகக்கூடும் என்பதால் உ.பி., தெலுங்கானா, கேரளா, ஆகிய மாநிலங்கள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
இம்மாதம் 17-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறவுள்ளதால், அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.