"புண்ணியவான் அன்பு".. முரட்டு தோற்றம்.. மனசு சொக்க தங்கம்.. மாற்றுகட்சியினரும் நெகிழ்ந்து கண்ணீர்!
திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனின் ஈர மனசை தொண்டர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்
சென்னை: தோற்றம்தான் முரட்டுத்தனம்.. உண்மையில் மனசு சொக்க தங்கம்.. மறைந்த ஜெ.அன்பழகனின் தெரியாத மறுபக்கம் ஒன்று உள்ளது.. அவை அத்தனையும் ஈரம் கசிய வைப்பவை. "அந்த புண்ணியவான் செய்த உதவியை காலத்துக்கும் மறக்க மாட்டோம்" என்று திமுக தொண்டர்களே இப்போதும் கண்கலங்கி சொல்கிறார்கள்.
திமுகவின் எம்எல்ஏக்களிலேயே ரொம்பவும் ஃபேமஸ் ஆன இவர், கம்பீரமான, பெருத்த உடலமைப்பு கொண்டவர்.. அதிரடியாக வாதங்களை புரிந்து கொண்டே இருப்பார்.. துணிச்சலான அறிக்கைகளை விடுத்து கொண்டே இருப்பார்.. சட்டசபையில் அன்பழகனின் விவாத குரல் ஒலித்து கொண்டே இருக்கும்.
எதுவாக இருந்தாலும் தன் மனசுக்கு ஒரு விஷயம் தப்பு என்று பட்டுவிட்டால், அதை அப்படியே வெளிப்படையாக சொல்லிவிடுவார்.
4 மாதங்களில் 3வது எம்எல்ஏ மரணம்.. சட்டசபையில் திமுக பலம் 97ஆக குறைந்தது
பாரம்பரிய கட்சி
அந்த கருத்துக்களை யாருக்காகவும் தன்னை காம்பரமைஸ் செய்து கொள்ளவே மாட்டார்.. இதனால் அதிரடிகளுக்கு பெயர் போனவராகவே அன்பழகன் எல்லார் கண்ணிலும் பதிந்தார். திமுக போன்ற பாரம்பரிய கட்சிக்கு இப்படிப்பட்ட கொள்கை பிடிப்பும், நுணுக்கமான விஷயங்களை என்றாலும் அதை எடுத்து சொல்லும் பாங்கும் மிக அருமையானது.. இப்படிப்பார்த்து பழக்கப்பட்ட அன்பழகனுக்குள்தான் எத்தனை எத்தனை கரிசனங்கள் ஒளிந்து கொண்டிருந்திருக்கின்றன.
நிதியுதவி
திமுக தொண்டர்களின் பல வீட்டு கல்யாணங்கள் அன்பழகன் மறைவாக செய்த உதவிகளால்தான் நடந்துள்ளது.. ஏழை தொண்டர் ஒருவர் தன் வீட்டு கல்யாணம் நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டாலே அங்கு அன்பழகனின் நிதியுதவி தானாக வந்து சேர்ந்துவிடும்.. அதேபோல மருத்துவ உதவி என்று யார் வந்தாலும் சிகிச்சைக்கு பணம் தந்து உதவுவதுடன், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கே போன் செய்து உரிய சிகிச்சைக்கு கோரிக்கை விடுப்பார்... எத்தனையே உயிர்களை காப்பாற்றிய அன்பழகன், இன்று தன் உடல்நிலையை காப்பாற்றி கொள்ள முடியாமல் போனதே என்று கண்கலங்குகின்றனர் தொண்டர்கள்.
படிப்பு
பொதுவாக, படிப்பு விஷயம் என்றால் அன்பழகன் முக்கியத்துவம் தருவாராம்.. தள்ளுவண்டி வச்சிருக்கும் தொண்டரின் வீட்டு பிள்ளைகள்கூட தானே பொறுப்பெடுத்து கான்வென்ட்டில் படிக்க வைப்பார் அன்பழகன்.. ஏழை தொண்டர்களின் குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டி படிக்க வைத்துள்ளார்.. கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிதியுதவிடன் கோரிய மனுக்கள் இவரது ஆபீசில் உள்ள டேபிளில் நிறைந்து வழியுமாம்.. அனைத்து தரப்பினருக்குமே தெரிந்திருக்கிறது அன்பழகனின் இரக்க குணம் பற்றி!
ஈர மனசு
இந்த துணிச்சலையும் ஈர மனசையும் தந்தையிடமும் கலைஞர் கருணாநிதியிடம் சிறுவயதிலிருந்தே பார்த்தவர்.. இறுதிவரை கடைப்பிடித்தும் வந்தவர்.. 1976-ல் எழும்பூரில் கமிஷனர் ஆபீஸ் எதிரே கருணாநிதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது, பள்ளிப் படிப்பை முடித்திருந்த ஜெ.அன்பழகன் அவருடன் எப்போது இணைந்து போராடினாரோ அப்போதே கொள்கை பிடிப்பும், ஈர்ப்பும், ஈர மனசும் அச்சிறு வயதிலேயே அவரை பற்றிக் கொண்டுவிட்டது... ஒரு கோரிக்கை மனு வந்தால் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதும் கருணாநிதியிடம் இருந்து கற்ற பாடம்தான்.
இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் உயிருடன் நடமாடுகிறார் என்றால், அது அத்தனையும் அன்பழகன் செய்த புண்ணியத்தால்தான் என்று கண்கலங்கி சொல்கின்றனர் தொண்டர்கள்.