ஜெ. அன்பழகன்.. நிறைய பாடங்கள்.. படிப்பினைகள்.. கவனம் தேவை தலைவர்களே.. மக்களுக்கு நீங்கள் முக்கியம்
திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனின் மரணம் பாடங்களை கற்று தந்துவிட்டு போயுள்ளது
சென்னை: கண்ணம்மா பேட்டையில் அடக்கம் செய்ததுடன் ஜெ.அன்பழகன் மரணம் முடிந்துவிடவில்லை.. ஏராளமான பாடத்தையும், படிப்பினையையும் அந்த மரணம் நமக்கு சொல்லி தந்துவிட்டு போயுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் தொற்று வந்து இந்தியாவில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.. இன்னமும் பலர் பாதிப்பில் உள்ளனர்.
எப்படி இதற்கு சிகிச்சை தருவதென்றே தெரியாமல் உலக நாடுகளே கதி கலங்கி உள்ளன.. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், அதுவும் சென்னையில் தொற்று அதிகம் என்பது ஒருசில மாதமாகவே உள்ள இயல்பு நடைமுறை ஆகும்.
நிறைவேறா ஆசை.. கருணாநிதி இறப்பதற்கு முன்பே தன் உயிர் பிரிய விரும்பிய ஜெ அன்பழகன்
முக ஸ்டாலின்
இவைகள் தெரிந்தும், தன்னை எந்தவிதத்திலும் அன்பழகன் கவனித்து கொள்ளவில்லையே என்பதுதான் கவலையாக உள்ளது.. எத்தனையோ முறை திமுக தலைவர் உடல்நலனை கவனித்து கொள்ளுங்கள் என்று மா.செ. முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் வீடியோ மூலம் கேட்டு கொண்டபடியே இருந்தும், அஜாக்கிரதையாக விட்டுவிட்டார். கொரோனா பணியில் காட்டிய தீவிரத்தில் கொஞ்சம் தன் உடல்நலனில் காட்டிக் கொள்ளவில்லையே என்று ஆதங்கம்தான் அதிகரிக்கிறது.. நேற்று தங்கள் மன்றத்து நிர்வாகிகளுக்கு ரஜினி ஒரு அட்வைஸ் தந்திருந்தார்.
பிசாசுத்தனமான அடி
அதில், "அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல... பிசாசுத்தனமான அசுர அடி.. இப்போதைக்கு இது தீராது போல் தெரிகிறது. இதனுடையே வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும்... உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை.. ஆரோக்கியம் போச்சுன்னா.. வாழ்க்கையே போச்சு" என்று கூறியிருந்தார்.. ரஜினி சொன்னது 100 சதவீதம் உண்மை.
மரணம்
அசுர அடி, பிசாசுத்தனமான அடிதான், நம் கண்ணெதிரே அன்பழகன் மரணத்தில் நடந்துள்ளது.. திமுக என்றில்லை, அதிமுக, உட்பட யாராக இருந்தாலும் சுய பாதுகாப்பு அவசியமாகிறது.. ஜனவரியில் நினைத்ததைவிட அடுத்த 3 மாதங்களில் அதன் கொடூரம் அதிகமாக இருந்தது.. இன்றோ பன்மடங்கு வீரியமாகி உயிரையே கலங்க வைத்து வருகிறது.
தவிர்க்க முடியாது
இதுபோன்ற கொள்ளை நோய் பரவல் சமயங்களில், மக்களை காக்க வேண்டிய அவசியம்தான்.. மக்கள் நலப் பணிகளும் தவிர்க்க முடியாததுதான்.. மக்களை காப்பதுபோல, மக்களுக்கு உதவுவோரும் மிக மிக கவனமாக இருந்து தங்களை காத்து கொள்ளவேண்டி இருக்கிறது. குறிப்பாக பல்வேறு உடல் உபாதைகள் உள்ள தலைவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கட்சி பிரமுகர்கள் நேரடியாக களத்திற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதிமுக
இது திமுகவினருக்கு மட்டுமல்ல.. மக்களுக்கு உதவும் அனைவருக்குமே பொருந்தும்... கட்சி தலைவர்தான் வந்து நிவாரணம் வழங்கவேண்டும், கட்சி நிர்வாகி தந்தால்தான் நிவாரணத்தை ஏற்போம் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.. நம் மக்கள் அந்த அளவுக்கு பிடிவாதத்தை இந்த தருணத்தில் காட்டக்கூடியவர்கள் அல்ல.. அவர்களுக்கும் தற்போதைய நிலைமை புரியும்.. அதனால் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் வந்து சேர்ந்தால் போதும் என்றுதான் நினைப்பார்கள்.
பிரமுகர்கள்
கட்சியும், மக்களும் ஒவ்வொரு பிரமுகருக்கு எவ்வளவு முக்கியமோ,அந்த அளவுக்கு இந்த பிரமுகர்கள் அவரவர் குடும்பத்துக்கும் முக்கியம்.. இவர்கள்தான் அந்த வீட்டின் ஆணிவேர்.. இவர்களை நம்பிதான் அந்த குடும்பமும் உள்ளது.. அதனால் தன்னை நம்பி இருப்பவர்களை பற்றியும் கொஞ்சமாவது யோசித்து பார்க்க வேண்டும். மக்களுக்கு உதவ ஒருவர் இல்லாவிட்டாலும் இன்னொருவர் இருப்பர்.. அல்லது வேறு வகையில் அனைத்து உதவிகளும், நிவாரணங்களும் சென்றடைய வைக்க முடியும்.. ஆனால் அந்த குடும்பத்துக்கு இவர்கள் மட்டும்தான் மொத்த சொத்தும்!
உதவிகள்
எனவே, தன் நிலைமையும், சுய பாதுகாப்பையும் உணர்வதும், கடைப்பிடிப்பதும் அவசியம்.. "எனக்கும் ஆபரேஷன் ஆயிருக்கு.. என்னையும் டாக்டர் வெளியே போகக்கூடாதுன்னு சொன்னார்... அதுக்காகத்தான் ஒரு மணி நேரம் மட்டும் வெளியே போய்ட்டு உதவிகள் செய்துட்டு வந்துடறேன்" என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அன்பழகனே சொல்லியிருந்தார்.. ஒருமணி நேரமே வெளியில் சென்றாலும் இவரை அந்த நோய் எந்த அளவுக்கு தாக்கியிருக்கிறது என்ற பயங்கரத்தைதான் நாம் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.
திமுக
மரணம் என்பது ஒரு குடும்பத்தோடு மட்டும் சேர்ந்ததாக இருக்காது.. அவர்கள் சார்ந்த இயக்கத்திற்கும் கூட அது தாங்கொணா துயரத்தையும், வலியையும் கொடுக்கக் கூடியது... அப்படித்தான் திமுக இன்று துயரை தாங்க முடியாமல் துடித்து கொண்டிருக்கிறது.. இந்த நிலைமை வேறு எந்த கட்சிக்காரர்களுக்கும் வந்துவிடக்கூடாது. அந்தந்த கட்சி தொண்டர்களால் அதை தாங்கி கொள்ளவும் முடியாது.
அலசியம்
அது மட்டுமல்ல, ஆயிரம் வலிமை மிக்க, மதிப்பு மிக்க இந்த உயிரை வெறும் அலட்சியத்தால் பறிகொடுப்பதைதான் ஜீரணிக்கவே முடியவில்லை.. இயற்கையின் மரணத்தை நம்மால் வெல்ல முடியாது, ஆனால் தொற்றை நம்மால் வெல்லலாம்.. அனைத்து கட்சிக்காரர்களுமே தங்கள் உடல்நலனை கவனித்து கொள்ள வேண்டும் என்பதே நம்முடைய உருக்கமான வேண்டுகோள்!!