"நீங்க முதல்வரா வரணும்".. ஆசைப்பட்ட மாதிரி ஸ்டாலினை பார்க்க முடியாமலேயே மறைந்து போன ஜெ.அன்பழகன்
திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் - முக ஸ்டாலின் நட்பு அற்புதமானது
சென்னை: "நான் ஏற்கெனவே அன்புகிட்ட சொன்னேன்... உடம்பை பார்த்துக்கோன்னு.. கவனிக்கவே இல்லை. என் அன்புவை எப்படியும் மீட்டு குடுத்துடுங்க.. என் ரொம்ப நாள் ஃபிரண்ட்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தபடியே இருந்தும், இன்று உயிர் நண்பனை இழந்துவிட்டார் முக ஸ்டாலின்! ஜெ.அன்பழகன் மரணம் குறித்த செய்தியை கேட்டதும் கதறி வெடித்து அழுதார்!
பாரம்பரியமான கழக ரத்தம் உடலில் பாய்ந்தோடுகின்ற உடன்பிறப்பு நான் என்று கர்ஜித்தபடி முழங்கி கொண்டே இருந்தவர் ஜெ.அன்பழகன்! திமுகவின் எம்எல்ஏக்களிலேயே ரொம்பவும் ஃபேமஸானவர்.
கம்பீரமான, பெருத்த உடலமைப்பு கொண்டவர்.. அதிரடி என்றால் அது ஜெ.அன்பழகன்தான்! அதுவும் சட்டமன்றங்களில் அன்பழகன் இருந்தாலே அன்று நிச்சயம் பரபரப்பும், களேபரமும்தான்.. துணிச்சலான கருத்துகளை அதிமுகவுக்கு எதிராக உதிர்த்தும், கேள்விகளை எழுப்பி கொண்டே இருப்பார்.
அன்புச் சகோதரா அன்பழகா... இனி என்று காண்போம் உன்னை... மு.க.ஸ்டாலின் இரங்கல்
உதாரணங்கள்
இதற்கு ஓரிரண்டு உதாரணங்களையும் சொல்லலாம்.. "மேகதாது அணை, ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டது என எதைப் பற்றியும் திமுக பேசவே இல்லை.. உள்ளத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று பேசக்கூடியவர்கள், கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காகத் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்துள்ளனர். கட் அவுட்களுக்கு மின்சாரம் திருடியுள்ளார்கள். அதுக்கு ஆதாரம் என்கிட்ட இருக்கு" என்று அமைச்சர் ஜெயக்குமார் ஒன்றை கொளுத்தி போடவும், முதலில் திமுகவில் கொந்தளித்தது ஜெ.அன்பழகன்தான்!
வாட்ஸ்அப்
"வாட்ஸ்அப்பில் வந்ததையெல்லாம் ஆதாரமாக காட்டி பேசினால், நானும் வாட்ஸ்அப்பில் வந்ததையெல்லாம் ஆதாரமாக எடுத்து அமைச்சர் மீது எவ்வளவோ பேசலாம்... ஆனால் திமுக தரம் தாழ்ந்து போகாது" என்று ஒரே ஒரே அறிக்கை மூலம் அந்த பிரச்சனையை ஆஃப் செய்தார் அன்பழகன்!!
ஆதாரங்கள்
"ஒரு அதிகாரியைத் தரக்குறைவாக ஒருமையில் திட்டுகிறார்கள்... அந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் கேள்வி கேட்டால் அதிமுகவில் உள்ள மொத்த பேரும் என்மீது பாய்கிறார்கள்... அவங்க என்மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் பயப்பட மாட்டேன்" என்று அன்பழகன் சொல்வார். "இந்த அவையில் எத்தனையோ உறுப்பினர்கள் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். ஆனால் அன்பழகன் பேசும்போதுதான் பிரச்னை ஆகிறது" என்று முதல்வர் அடிக்கடி வேதனைப்பட்டு கொண்டே இருப்பார்.
முக்கிய தளபதி
அன்பழகன், திமுக தலைவர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் ஆவார்.. முக்கியத் தளபதிகளில் ஒருவராக கருதப்படுபவர்... ஸ்டாலின் மீது உரிமை எடுத்து பேசக்கூடியவர்.. திரண்டிருந்த அந்த கூட்டத்தில் ஸ்டாலினை வைத்து கொண்டு அன்பழகன் பேசுகிறார், "நீங்க தலைவராகிட்டீங்க.. இனிமேல் நீங்க பேன்ட் அணியக் கூடாது" என்று அன்பு கோரிக்கை வைத்தார்.. அதேபோல கட்சி தலைவரின் நடவடிக்கை குறித்தும் துணிந்து கருத்துக்களை சொல்லிவிடுவார். மனசில் எதையுமே வைத்து கொள்ள மாட்டார்.
அறிவுரை
"எம்பி தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை நியமித்திருக்க வேண்டியதில்லை... அவங்க என்ன செய்துட போறாங்க.. நாங்க மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே தொகுதியில் வேலை பார்த்துட்டுதானே இருக்கிறோம். வேணும்னா வேலை சரியாக நடக்குதா இல்லையான்னு ஆட்களை வைத்துக் கண்காணியுங்கள்... அதையும் எங்களுக்கு தெரியாமலேயே நடத்துங்கள்... இது அறிவுரை இல்லை.. உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்லை.. நீங்க முதல்வராக வர வேண்டும்.. அதுக்குதான் இதை சொல்றேன்" என்று கூறியவர்.. இதுதான் எல்லைதாண்டிய அக்கறை என்பது.. சுயநலம் இல்லாதது.. அதைதான் கடைசிவரை திமுக தலைவரிடம் அன்பழகன் வெளிப்படுத்தி கொண்டே இருந்தார்.
ஸ்டாலின்
கொரோனா தடுப்பு பணிகளை இந்த அளவுக்கு இழுத்து போட்டு செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஏற்கனவே அவர் உடம்பு சரியில்லாமல் இருந்தவர்.. முதன்முதலில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று டாக்டர் ரேலா ஸ்டாலினிடம் சொன்னபோதே கடுமையான அதிர்ச்சியானார்.. ஜெகத்ரட்சகனிடம், "நான் ஏற்கெனவே அன்புகிட்ட சொன்னேன்.. உடம்பை பார்த்துக்கோன்னு.. கவனிக்கவே இல்லை.. எப்படியாவது என் அன்புவை மீட்டு கொண்டு வந்துவிடுங்கள்.. என் ரொம்ப நாள் ஃபிரண்ட்" என்று முதல் நாளிலேயே உருக்கமாக சொன்னார்.
அன்பழகன்
அன்பழகன் எப்படியாவது பிழைத்து கொண்டு வந்துவிட மாட்டாரா என்று ஏங்கி கொண்டே இருந்தார்.. தமிழக முதல்வரும் அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தபடியே இருந்திருக்கிறார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார்.. தமிழிசை சவுந்தராஜனோ ஐதராபாத்தில் இருந்து மருந்து அனுப்பினார்.. இப்படி கட்சிகளையும் தாண்டி அனைவரையும் ஈர்த்தவர் ஜெ.அன்பழகன்.. கண்ணெதிரே சிரித்தபடியே சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருந்தவர் இப்படி பொசுக்கென போவார் என்று தமிழகமே எதிர்பார்க்கவில்லை.. இவரது நினைவுகளில் இருந்து மீண்டு வர திமுக தலைவருக்கு நெடும் நாள் பிடிக்கும்!!