சென்னையில் அரசியல் செய்வது அவ்வளவு எளிதல்ல... அஞ்சா நெஞ்சராக திகழ்ந்த தீரன் ஜெ. அன்பழகன்
சென்னை: மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனை பொறுத்தவரை மனதில் படுவதை யார் முன்னிலையிலும் துணிச்சலாக பேசக்கூடியவர்.
தொண்டனுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக நிற்கும் ஜெ.அன்பழகன், தலைநகர் சென்னையில் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அரசியல் செய்து வந்தவர்.
இவரது தந்தை பகுதிச் செயலாளராக இருந்த நிலையில், படிப்படியாக முன்னேறி திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவியை அடைந்தார் இவர்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்... பிறந்தநாளன்று உயிர்பிரிந்தது
பழக்கடை ஜெயராமன்
விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள வெங்கமூர் கிராமம் தான் ஜெ.அன்பழகனின் சொந்த ஊர். இவரது தந்தை ஜெயராமன் இளம் வயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்து தியாகராயர் நகரில் பழக்கடை தொடங்கினார். திமுகவில் பகுதிச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார். திராவிட சித்தாந்தங்கள் மீது பற்றுகொண்ட பழக்கடை ஜெயராமன் தனது இரண்டு மகன்களுக்கும் அன்பழகன், கருணாநிதி என பெயர் சூட்டினார்.
கடின உழைப்பு
தந்தையை அடியொற்றி கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிய ஜெ.அன்பழகன் திமுகவுக்காக நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கத் தொடங்கினார். கருணாநிதி மீது இவருக்கு இருந்தது பக்தி என்று கூட சொல்லலாம். அந்தளவிற்கு கருணாநிதியின் எண்ண ஓட்டங்களை அறிந்து அதற்கேற்றார் போல் காரியம் ஆற்றினார். திமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் ஜெ.அன்பழகனின் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்திருப்பதால், மற்ற மாவட்டச் செயலாளர்களை விட இவர் தலைமைக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான்.
மனதில் பட்டதை
ஜெ.அன்பழகனை பொறுத்தவரை மனதில் பட்டதை எதற்காகவும், யாருக்காகவும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் வழக்கம் உடையவர். இதன் காரணமாக இவர் பல சிக்கல்களையும் எதிர்கொண்டதுண்டு. பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், சட்டமன்ற கூட்டம் என எந்த இடமாக இருந்தாலும் அன்பழகன் பேச எழுந்தாலே அதிரடியாக தான் இருக்கும். அதேபோல் தொண்டனுக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதல் ஆளாக முன்னுக்கு நிற்பார்.
அரசியல் செய்வது
தலைநகர் சென்னையில் அரசியல் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் அறிவர். அதுவும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை திரும்பிப்பார்த்தால் சொல்லவே தேவையில்லை. அந்தளவிற்கு அரசியல் களம் சென்னையில் கடுமையாக இருந்தது. இருப்பினும் தனது அபிமானிகளின் துணையை கொண்டு தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை வெற்றிக்கரமாக அரசியல் செய்து மாவட்டச் செயலாளர் என்ற பதவியில் இருந்தவாறே மறைந்துள்ளார் அன்பழகன்.
பழக்கடை
அன்பழகன் அரசியலில் மட்டுமல்லாமல் சினிமா துறையிலும் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தார். என்ன தான் வசதி வந்தாலும் தனது தந்தை ஆரம்பக் காலத்தில் தி.நகரில் தொடங்கிய பழக்கடையை தொடர்ந்து நடத்தியவர் ஜெ.அன்பழகன். அதனை அன்பழகனின் மகன் கவனித்து வருகிறார். தனது மகன் ராஜா கட்சி நிகழ்ச்சிகள் ஒன்றுவிடாமல் கலந்துகொண்டு வரும் நிலையில், அவருக்கு எந்தப் பதவியும் கொடுக்க விரும்பவில்லை அன்பழகன்.
கட்சி நிகழ்ச்சிகள்
ஜெ.அன்பழகனை பொறுத்தவரை எது இருக்கிறதோ இல்லையோ கட்சி நிகழ்ச்சிகள் தனக்கு நாள் தவறாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் தொடர்ந்து நடத்தியவர். இப்போது கொரோனா காலத்திலும் உடல் நலிவுற்றதை கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்சிப் பணிகள் ஆற்றியவர். இவரது மறைவை பொறுத்தவரை திமுகவுக்கு பேரிழப்பாகவே கருதுகின்றனர் அக்கட்சியின் தொண்டர்கள்.