அன்பழகனுக்காக.. ரேலா மருத்துவமனைக்கு விரைந்து வந்த கொரோனா மருந்து.. பாசத்துடன் அனுப்பி வைத்த தமிழிசை
ஜெ அன்பழகனுக்கு மருந்துகளை அனுப்பி வைத்துள்ளார் தமிழிசை
சென்னை: உயிருக்கு போராடி வரும் திமுகவின் ஜெ.அன்பழகனின் சிகிச்சைக்கு ஓடோடி வந்து உதவி உள்ளார் பாஜகவின் தமிழிசை சவுந்தராஜன்.. சிகிச்சை அளிப்பது தொடர்பாக லண்டன் மருத்துவர்களோடு ரேலா ஆஸ்பத்திரி மருத்துவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தேவையான மருந்துகளை தெலுங்கானாவில் இருந்து அனுப்பி வைத்துள்ளார் டாக்டர் தமிழிசை!
ரேலா ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சையில் உள்ளார் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன்.
கடந்த வாரம் 90 சதவீதம் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு ஆரம்பத்தில் மிக மோசமான நிலைமையில் உடல்நிலை இருந்தது.. 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு சற்று பரவாயில்லை, உடல் தேறி வருகிறது என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.. ஆனால், திரும்பவும் அவருக்கு உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ளது.. மீண்டும் ஆக்ஸிஜன் தேவை அளவு அவருக்கு அதிகரித்துள்ளது.
அதேசமயம், அன்பழகனின் கிட்னி, இதயத்தின் செயல்பாடுகளும் மோசமடைந்துள்ளன.. எனினும் அவரது ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. திமுக தலைவர் அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தபடியே உள்ளார்.. அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்றும் விசாரித்துவிட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து கவலைக்கிடம் என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.. இந்த சமயத்தில்தான் தெலுங்கானா ஆளுநரும் தமிழக முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை செளந்தரராஜன், ஐதராபாத்தில் இருந்து கொரோனாவுக்கான முக்கிய மருந்தினை வாங்கி ரேலா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கொரோனாவுக்கான முதல் மருந்தை ஐதராபாத் -தான் கண்டுபிடித்தது.. "ரெம்டெசிவிர்", கோவிட் 19 என்ற மருந்துகளைதான் தெலுங்கானாவில் கொரோனா நோயாளிகளுக்கு தரப்பட்டு வருகிறது... பெரும்பாலானோர் குணமாகியும் வருகிறார்கள்.
இதே மருந்தைதான் அமெரிக்கா, இத்தாலி நாடுகளிலும் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.. சிகிச்சை உதவியை ரேலா ஆஸ்பத்திரி ஏற்கனவே கோரிய நிலையில், அதை உடனடியாக ஏற்று ரெம்டெசிவிர், கோவிட் 19 மருந்துகளை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அனுப்பி வைத்துள்ளார்.
ஆபத்து நேரத்தில் உயிரை காப்பாற்ற தமிழிசை சவுந்தராஜன் மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது நெகிழ்ச்சியை தந்து வருகிறது.. அந்த மருந்துகள் எல்லாம் அன்பழகனுக்கு முழுவதுமாக பலன் தந்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும்!