இரவு, பகலாக டார்ச்சர்.. மிரட்டுகிறார்கள்.. உயிருக்கு ஆபத்து உள்ளது.. ஆடியோ மூலம் தீபா புகார்
சென்னை கமிஷனரிடம் ஜெ தீபா பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார்
சென்னை: "அரசியலில் இருந்து விலகிவிட்டதால், என் உயிருக்கு ஆபத்து வந்துள்ளது, அதனால் எனக்கும், கணவருக்கும் போலீஸ்தான் பாதுகாப்பு தர வேண்டும்" என்று கமிஷனர் விஸ்வநாதனிடம் ஜெ.தீபா ஆடியோ மூலம் புகார் தந்துள்ளார்.
அரசியலின் ஆழம் தெரியாமல் காலைவிட்ட தீபா, தன்னுடைய பெயரிலேயே "எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை" என்று கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சி ஆரம்பித்தது முதலே ஏகப்பட்ட சர்ச்சைகள், விமர்சனங்கள் வெளிவந்து கட்சியையே டேமேஜ் ஆக்கிவிட்டது.
இதையடுத்து உரிய முக்கியத்துவத்தையும், மதிப்பையும் இந்த கட்சி இழக்க ஆரம்பித்தது.. நிர்வாகிகள் விலக ஆரம்பித்தனர்.. தேர்தல் நேரத்திலும் தீபா எங்கே? என்ற கேள்விதான் எழுந்தது.
எச்சரிக்கை
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஜெ.தீபா அரசியலுக்கே முழுக்கு போடுவதாக அறிவித்தார். தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், என்றும், குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க போவதாகவும், மீறி தன்னை தொந்தரவு செய்தால் போலீஸுக்கு போய்விடுவேன் என்றும் எச்சரித்து இருந்தார்.
ஆடியோ புகார்
இந்நிலையில், யார் என்ன செய்தார்களோ தெரியவில்லை.. தீபா தன் உயிருக்கு ஆபத்து என்று கமிஷனருக்கே புகார் அளித்துள்ளார். ஆடியோ மூலம் இந்த புகாரை கமிஷனர் விஸ்வநாதனுக்கு தீபா அனுப்பி இருந்தார். அதில் அவர் சொல்லி உள்ளதன் சுருக்கம் இதுதான்:
மிரட்டுகிறார்கள்
"நான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் பேசறேன். உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். அதிகாரப்பூர்வமாக நானே எனது சொந்த முடிவின்படி இதை ஒரு புகாராக தெரிவிக்கிறேன். அதிமுக என்ற மக்கள் சக்தியுடைய அமைப்பில் இந்த பேரவை இணைக்கப்பட்டதால், அதிருப்தியில் இருப்பவர்கள், சிலரது தூண்டுதலின்பேரின் தன்னிச்சையாக செயல்பட்டு என்னை மிரட்டி தொந்தரவு செய்கிறார்கள்.
தொல்லை
இரவு, பகலாக போன் செய்து, வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்கள். ஒரு பெண் என்றும் பாராமல் 24 மணி நேரமும் எனக்கு தொல்லை தருகிறார்கள். அரசியலில் இருந்து விலகிவிட்ட சூழ்நிலையில், எனது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தயவுசெய்து காவல்துறை எனக்கும், எனது கணவர் மாதவனுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
பாதுகாப்பு
குறிப்பாக 6 பேர் சேர்ந்து, என்னை துன்புறுத்தி டார்ச்சர் செய்கிறார்கள். எங்களுக்கு எந்த நேரமும் அச்சுறுத்தல் உள்ளதால், எங்களுக்கும், எனது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.