கட்சி இருக்கோ இல்லையோ.. போஸ்ட்டிங் போடுவதில் தீபா செம பிசி!
ஜெ. தீபா தனது கணவன் மாதவனுக்கு புதிய பதவியை வழங்கினார்
சென்னை: தீபாவின் கட்சி இருக்கோ இல்லையோ.. ஏதாவது செய்து லைம்லைட்டிலேயே இருக்கிறார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக தனது கணவர் மாதவனை நியமித்து ஒரு போட்டோவும் எடுத்து வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, மாதவனை காதலித்து, பிறகு பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டவர். ஆனால் ஜெயலலிதா இறந்தபிறகுதான் இவரை பற்றின நிறைய விஷயங்கள் தெரியவந்தன. குறிப்பாக சர்ச்சைகளாலேயே ஃபேமஸ் ஆனவர்தான் தீபா.
பொறுப்பாளர்கள்
போன வருஷம் பிப்ரவரி 24-ம் தேதி ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை தொடங்கினார். தொடங்கிய உடனேயே பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாதவனுக்கும் தீபாவுக்கும் சண்டை ஸ்டார்ட் ஆகிவிட்டது. அதனால் தீபாவுக்கு போட்டியாக மாதவன் தனியே பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
வீட்டை விட்டு வெளியேறினார்
அதன்பிறகும் தீபாவின் நடவடிக்கைகளால் கடுப்பான மாதவன், ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தீபா தனித்து செயல்படவில்லை' என்று ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டு, வீட்டை விட்டும் கிளம்பி சென்று விட்டார்.
கார் டிரைவர் ராஜா
கொஞ்ச நாள் கழித்து ஒரு கட்சியை தொடங்கினார் மாதவன். அப்போது ‘தீபாவை முதல்வராக்குவதே தனது கட்சியின் நோக்கம்' என்று சொல்லிவிட்டு, தீபாவுடன் திரும்பவும் இணைந்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் நடுவில் கார் டிரைவர் ராஜா தனியாக ஒரு பிரச்சனை செய்தார்.
ஃபேமஸ் ஆனார்
மோசடி புகாரில் சிக்கிய ராஜாவை பேரவை பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக தீபா அறிவித்தார். ஆனால் கொஞ்ச நாளிலேயே ராஜாவையும் திரும்ப சேர்த்துகொண்டார். இப்படித்தான் தீபா ஃபேமஸ் ஆகி கொண்டிருக்கிறார். இதுபோல தீபாவும் மாதவனும் ஒருத்தருக்கொருத்தர் முரணாக பேசியும், முடிவுகளை மாற்றியும் வந்ததால் அவர்களுடன் இருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக எப்போதோ விலகத் தொடங்கி விட்டார்கள்.
துணை பொதுச்செயலாளர்
இந்த நிலையில், தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, ஆறுமுகசாமி கமிஷன் முன்பு மாதவன் ஆஜராகி, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதுடன் வெளியே வந்து செய்தியாளர்களிடமும் பேசினார்.
ஒன்று சேர்ந்து விட்டோம்
அப்போது, "நானும் தீபாவும் ஒன்று சேர்ந்து விட்டோம். இனி எங்களின் அரசியல் பயணமும் ஒன்றாகும். கட்சியும் பேரவையும் இணைவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்' என்றார். அப்படி என்றால் இதுநாள் வரை ஆலோசித்து வந்தது அவருக்கே பொறுப்பு தரப்படுவதை பற்றிதானா? என தெரியவில்லை.
என்ன பிரயோஜனம்?
தீபாவின் கட்சியில், தீபா, கணவன் மாதவன், கார் டிரைவர் ராஜா என 3 பேரை தவிர வேறு பெயர்களை இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆக போகிறது, ஆனால் இதுவரை கட்சி ரீதியான செயல்பாடுகள், ஆக்கப்பூர்வமான பணிகள் என்ன என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்திற்காக தீபாவின் பெயரை நாம் உச்சரித்து கொண்டிருக்கிறோமே தவிர, வேறு ஒரு பிரயோஜனமும் இதுவரை காணோம்