நம்ப வைத்து ஏமாற்றப்பட்டேன்... நெருக்கமான வட்டத்தில் உருகிய ஜெ.தீபா
சென்னை: அரசியலில் நம்பக்கூடாத சிலரை நம்பி தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தனி அமைப்பு நடத்தி வந்த ஜெ.தீபா, அதனை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைய முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.ஆகியோரிடம் இருந்து உரிய பதில் வராததால், இப்போது அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளார் தீபா.
மாவட்ட நிர்வாகிகள் கையில் முடிவு... பொன்.ராதாகிருஷ்ணன் புதிய முயற்சி
ஜெ.தீபா பேரவை
ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா, சசிகலா குடும்பத்தினர் மீது வைத்த குற்றச்சாட்டு காரணமாக ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். தனது அத்தையுடன் தன்னை சேரவிடாமல் தடுத்தது சசிகலா தான் என, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டு அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்தது.
ஏமாற்றம்
ஜெயலலிதா இறந்த தருணத்தில் ஜெ.தீபா அரசியலில் ஒரு புதிய முயற்சியில் இறங்கினார். ஆனால் கால ஓட்டத்திற்கேற்ப அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினார். பின்னர் ஒரு கட்டத்தில் அரசியலே வேண்டாம் என்ற முடிவை எல்லாம் அறிவித்தார்.
அறிவுறுத்தல்
பேரவை நடத்தி வந்த தன்னை அதிமுகவில் இணையுமாறு சிலர் அழைப்பு விடுத்ததாலும், சிலர் அறிவுறுத்தியதாலும் அமைப்பை கலைத்துவிட்டு அதிமுகவில் ஐக்கியமாவது என்ற மனநிலைக்கு வந்தார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஆகியோருக்கு தனது நிலைப்பாட்டை கூறி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்துவிட்டார்.
எதிர்ப்புக் குரல்
இந்நிலையில், இனியும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சை நம்பி பயனில்லை எனக் கருதிய ஜெ.தீபா மீண்டும் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தத் துணிந்துவிட்டார். மேலும், அதிமுக தலைமைக்கு எதிராக ஜெ.தீபா இனி குரல் கொடுக்கக்கூடும் என்பதால் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது.