ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்ற ஜெ.தீபா.. "புது ரூட்டா இருக்கே".. டக்கென திரும்பிப் பார்த்த ஈபிஎஸ்!
ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, இன்று திடீரென சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்கு சென்று ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துப் பேசினார் . இந்தச் சந்திப்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணியினரும் இன்று வேட்பாளரை அறிவித்தனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்தார்.
சிக்கலில் பாஜக.. இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..அண்ணாமலையின் அடுத்த மூவ் இதுதான்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். பாஜக போட்டியிட விரும்பினால் அக்கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் சந்தித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார். மேலும், குஜராத்திற்கு சென்றிருந்த போது, பாஜக முன்னணி தலைவர்களிடம் பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக தெரியவில்லை.
வேட்பாளர்கள்
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளரே அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியிலும் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடந்த செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது அணி சார்பில் செந்தில்முருகன் என்பவரை நிறுத்துவதாக அறிவித்தார்.
மீண்டும் சிக்கல்
மேலும், ஒருவேளை பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி தற்போது வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான்தான் இருக்கிறேன் என்றும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இரு அணிகளும் வேட்பாளரை நிறுத்தி இருப்பதால் இரட்டை இலை சின்னத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திடீர் மீட்டிங்
இந்நிலையில், இன்று திடீரென சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்குச் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. அப்போது ஜெ.தீபாவின் கணவர் மாதவனும் உடன் சென்றிருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்புக்கு இடையே, ஜெ.தீபா ஓபிஎஸ்ஸை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இன்று தத்தம் அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஓபிஎஸ்ஸை சந்தித்ததால், அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுப்பாரா, ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வாரா எனும் கேள்விகள் எழுந்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பும் இந்த நகர்வை உன்னிப்பாக கவனித்தது.
அரசியல் சந்திப்பா?
எனினும், இந்தச் சந்திப்பு அரசியல் தொடர்பானது இல்லை என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.தீபா, தனது குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்க வந்ததாகவும், அரசியல் தாண்டி ஓ.பன்னீர்செல்வம் எனக்கு நல்ல பரிச்சயம் என்ற முறையில் அவரைச் சந்திக்க வந்ததாகவும் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.