எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்
Recommended Video
சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என அதன் பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். இவர் ஜெயலலிதா போல் தோற்றத்தில் இருப்பதால் இவரது கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர்.
கட்சியில் இணைய விண்ணப்பப் படிவத்துக்கு பணம் வாங்கி மோசடி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கட்சியின் கொள்கை, செயல்பாடுகள் குறித்து தீபா எங்கும் விளக்கியதில்லை.
குறைவு
இந்தியாவில், இல்லை தமிழகத்தில் எந்த பிரச்சினை என்றாலும் டுவிட்டர், பேஸ்புக்கோடு முடித்துக் கொள்வார் தீபா என்ற அவப்பெயர் ஏற்பட்டது. இதுவரை மக்களுக்காக அவர் இறங்கி போராடியவை விரல் விட்டு எண்ணக்கூடியதை விட குறைவாகவே இருந்தது.
மாற்றுக் கட்சியில்
கணவருடனான பிரச்சினை, சகோதரனுடனான பிரச்சினை, கட்சி நிர்வாகிகளுடனான பிரச்சினை, சொத்து பிரச்சினை என பிரச்சினை மேல் பிரச்சினை தீபாவுக்கு ஏற்பட்டதால் அவரால் கட்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. இதை நிர்வாகிகளே வெளிப்படையாக தெரிவித்துவிட்டு மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர்.
தேர்தல் அதிகாரிகள்
இந்த நிலையில் அத்தையின் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் தீபா. ஆனால் வேட்புமனுவில் ஏதோ தவறு இருந்ததை காரணம் காட்டிய தேர்தல் அதிகாரிகள் அவரது வேட்புமனுவை நிராகரித்தனர்.
அதிமுகவுக்கு ஆதரவு
இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலிலாவது ஜெ. தீபா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஜெ. தீபாவிடம், டிரைவர் ராஜா மனு தாக்கல் செய்தார். ஆனால் தீபாவோ சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தனது ஆதரவு என அறிவித்தார்.
போட்டி
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தீபாவுக்கு அதிமுக ஏதேனும் வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தீபா திடீரென கடந்த மாதம் 30-ஆம் தேதி பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டியிருந்தார்.
விலகல்
அதில் அரசியல் தனக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து விலகுகிறேன். தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்லை. கட்சியினர் கேட்பதால் தான் அரசியலில் நீடிப்பதாக கூறினார். இதையடுத்து சிறிது நேரத்துக்கெல்லாம் தான் விலகுவதாக அறிவித்தார்.
விலகிய தீபா
இதுபோல் மாறி மாறி தீபா பேசியதை எண்ணி தொண்டர்கள் மட்டுமின்றி மக்களும் குழப்பமான நிலைக்கு சென்றுவிட்டனர். அப்போது அவர் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. வேதனைதான் மிஞ்சுகிறது என கூறி விலகினார்.
அதிமுகவில் இணைய விருப்பம்
இந்த நிலையில் அரசியல் பிடிக்கவில்லை என கூறிய தீபா, தற்போது அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். கட்சியில் சேருவதற்கான தனது விருப்பத்தை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தீபா இதுபோல் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருந்தால் இவருக்கு அரசியல் எப்படி சரிப்பட்டு வரும் என மக்கள் கேள்வியாக உள்ளது.
கணவன் மாதவனுடன் பேட்டி
இந்த நிலையில் திநகரில் உள்ள தனது வீட்டில் கணவர் மாதவனுடன் ஜெ.தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் 2017-இல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினேன். அது போல் எனது கணவரும் ஒரு அரசியல் அமைப்பை தொடங்கினோம். இந்த அமைப்பு என்னுடைய அமைப்புடன் இணைந்துவிட்டது.
இணைப்பு
தற்போது எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அரசியல் பணிகள் ஏதும் என்னால் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால்தான் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்றேன். ஆனால் தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெ.வின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். அதனால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் விருப்பத்தை அதிமுகவிடம் கூறிய போது இணைப்பு பணியை விரைந்து செய்யுமாறு கூறினர். எனவே நம் அமைப்பின் தொண்டர்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் தீபா.