Exclusive: ஜெயலலிதாவின் வாரிசுகள்... நீதிமன்றமே எங்களை அங்கீகரித்துவிட்டது -ஜெ.தீபா நெகிழ்ச்சி
சென்னை: ஜெயலலிதாவின் 2-ம் நிலை வாரிசுகளாக அவரது அண்ணன் பிள்ளைகளான தீபக்கையும், தீபாவையும் உயர்நீதிமன்றம் அங்கீகரித்து இன்று தீர்ப்பு வழங்கியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டுமென பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இதனை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கருத்து அறிவதற்காக அவரை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்புகொண்டோம்.
அப்போது அவர் கூறியதாவது;
'' எங்கள் அத்தையின் (ஜெயலலிதாவை) வாரிசுகளாக என்னையும், எனது சகோதரர் தீபக்கையும் உயர்நீதிமன்றம் அங்கீகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இன்று நடைபெற்ற இந்த நிகழ்வை ஒரு நல்ல விஷயமாக நான் பார்க்கிறேன். இவ்வளவு நாட்களாக விடைத் தெரியாமல் பலர் எழுப்பிய கேள்விகளுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது''.
ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் தீபா, தீபக்கிற்கு 24 மணி நேர பாதுகாப்பு.. ஹைகோர்ட் உத்தரவு
''நீதிமன்றத் தீர்ப்பின் நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்த பின்னர் அதில் என்னென்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை படித்தால் தான் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க முடியும்.''
ஜெயலலிதாவின் இல்லத்தில் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்த யோசனை பற்றி கேட்டபோது '' அது தொடர்பாக அடுத்ததாக என்ன செய்வது என்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. அதேபோல், அத்தை பெயரில் உள்ள சொத்துக்களை பொதுசேவைக்காக அறக்கட்டளை அமைப்பது பற்றியும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது தானே தீர்ப்பு வந்துள்ளது, அதற்குள் நீங்கள் கேட்டால் எப்படி சொல்லமுடியும், பொறுத்திருந்து பாருங்கள்'' (wait and see) எனக் கூறி தனது கருத்தை முடித்துக்கொண்டார்.