எல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகத்துக்கு வருது தீபாவுக்கு.. இது கட்சியா இல்லை கம்பெனியா!!
அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி என தீபா அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தீபாவுக்கு எல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகம் வரும் போல இருக்கிறது.. தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று இன்றைக்கு வந்து அறிவித்திருக்கிறார்.
தேர்தல் வேலைகளை எல்லாம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே எல்லா கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. அதிலும் கடந்த ஒரு மாதமாக ஓய்வின்றி கடுமையாக தேர்தல் வேலையை பார்த்து வருகிறார்கள்.
இதில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தன் நிலைப்பாடு குறித்து அறிவிக்காமலேயே இருந்தது. இது சம்பந்தமாக நெட்டிசன்கள் மீம்ஸ்களையே உருவாக்கி கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு ஒரு கருத்தையும் தீபா சொல்லவில்லை. போட்டியிட போகிறாரா, இல்லையா, அல்லது யாருக்காவது ஆதரவு தெரிவிக்க போகிறாரா, அல்லது பிரச்சாரத்திற்கு செல்ல போகிறாரா என்பது குறித்தும் எந்தவிளக்கமும் அளிக்கப்படவில்லை.
வேட்பு மனு தாக்கல்
ஆனால் திடீரென இன்று தீபா எம்பி தேர்தல், மற்றும் 18 இடைத்தேர்தல் என இரண்டிலுமே போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இப்படித்தான் அன்றைக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் ரொம்பவும் ஆர்வத்துடன் போட்டியிட வந்தார். ஆனால், ஆவணங்களை சரியாக பூர்த்தி செய்ய முடியவில்லை என கூறி கடைசி நேரத்தில் ரிஜக்ட் செய்யப்பட்டார். இப்போதும், வேட்பு மனு தாக்கலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று வந்துள்ளார்.
உறுப்பினர்கள்
இது சம்பந்தமாக ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் தீபா வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் 18 தொகுதிகளை கூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் 40 தொகுதிகளில் போட்டி என்றால், அவ்வளவு உறுப்பினர்கள் அந்த கட்சியில் இருக்கிறார்களா? என தெரியவில்லை. இதுவரை ஒரு நிர்வாகி பெயரும் பொதுமக்களுக்கு பரிச்சயம் இல்லை. நமக்கு தெரிந்ததெல்லாம், தீபா, மாதவன், கார் டிரைவர்.. அவ்வளவுதான்!
கொள்கை
கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆக போகிறது, ஆனால் இதுவரை கட்சி ரீதியான செயல்பாடுகள் என்ன, மக்கள் பிரச்சனைகளை எத்தனை முன்னெடுத்து சென்றிருக்கிறார்கள் என தெரியவில்லை. முதலில் இந்த கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் என்னவென்று தெரியாத நிலை உள்ளது. இது தெரிந்தால்தானே தேர்தலில் மக்கள் இதனை ஒரு கட்சியாகவே அங்கீகரிப்பார்கள்?
ஒரே மர்மம்
மக்களுக்காக ஒரு போராட்டமும் நடத்தியதில்லை. ஆரம்பத்தில் ஏற்பட்ட எழுச்சியை அவரே மட்டுப்படுத்தி கடைசியில் மட்டையாகி ஓய்ந்தே போனார். அதிமுகவில் சேரப் போவதாக சொன்னார். இப்போது தனித்துப் போட்டி என்கிறார். இவர் யார் என்ன செய்கிறார் ஏன் இப்படிச் செய்கிறார். இவர் மேற்கொள்வது என்ன மாதிரியான அரசியல் என்று கூட யாருக்கும் புரியவில்லை. அவ்வளவு மர்மம்.
ஆச்சரியம்
ஒரு பக்கம் போட்டியிட லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக களம் இறங்கி இருக்கிறார் என்று தீபாவின் துணிச்சலை பார்த்து பாராட்டுவதா? அல்லது களப்பணி எதுவுமே செய்யாமல், கட்சியை வளர்க்காமல், மக்களுக்கான போராட்டத்தை முழுமையாக இதுவரை முன்னெடுக்காமல் பெயரளவுக்கு வந்து தேர்தலில் போட்டி போட போகிறாரே என்று அதிர்ச்சி அடைவதா என தெரியவில்லை. இது கட்சியா இல்லை கம்பெனியா என்பதே இன்னும் தெளிவாகாமல் வேறு உள்ளது.
பொள்ளாச்சி சம்பவம்
தீபா எலக்ஷனில் போட்டி போடுவது ஒரு பக்கம் இருக்கட்டும்.. முதலில் 400 பெண்களை நாசமாக்கி... கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஒரு பெண் என்ற முறையில் ஏதாவது கண்டனமாவது சொல்லட்டும்... அப்பறம் மத்ததை பார்த்துக்கலாம்!