ஜெ. கிட்ட இல்லாத பணமா.. வேற என்னமோ இருக்கு.. போயஸ் இல்ல முடக்கம் குறித்து அதிமுகவினர் குமுறல்
வேதா நிலையம் முடக்கப்பட்டு விட்டதால் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: "என்னது.. எங்க அம்மா 17 கோடி ரூபாயை வரி பாக்கி வெச்சாங்களா? அவங்க கிட்ட இல்லாத பணமா, இதுல வேற என்னமோ விஷயம் இருக்கு?" என்று போயஸ் கார்டன் வீடு முடக்கப்பட்டதற்கு அதிமுக தொண்டர்கள் ஆவேசத்துடன் கேட்கிறார்கள்.
72 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பார்த்து பார்த்து கட்டிய வீடுதான் இது. மகள் இந்த வீட்டில் ஒரு ராணிபோல என்னைக்குமே வாழ வேண்டும் என்று நினைத்து இந்த வீட்டை கட்ட அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
அம்முவுக்கு டிராயிங் ரூம், அம்முவுக்கு லைப்ரரி, அம்முவுக்கு ஜிம், அம்மு வாங்கும் மெடல்களை வைப்பதற்கென்றே ஒரு ரூம், அவ்வளவு எதற்கு? முதல் மாடி ரூமிலிருந்து நேரே கார்ஷெட்டுக்கு மேலே உள்ள ரூமுக்கு போக மாடியிலேயே ஒரு பாலமே அமைக்கப்பட்டது.
கிரஹப்பிரவேசம்
இப்படி செங்கல், சிமெண்ட்டுடன் தனது வாழ்நாள் ஆசையையும் கொட்டி சேர்த்து கட்டினார் சந்தியா. ஆனால் வீடு கட்டும் வேலை நடக்கும்போதே ரத்த வாந்தி எடுத்து.. ஆஸ்பத்திரியில் சேர்த்து.. கிரஹப்பிரவேசம் முன்பே இறந்தும் போனார்.
வேதாநிலையம்
தனக்காக தன் தாய் எடுத்த முயற்சி, தன் ஆசைகளை இழைத்து கட்டிய வீட்டில் தாய் இருப்பதை போலவே உணர்ந்து வேதவல்லி என்ற தாயின் பெயரை "வேதா இல்லம்" என்று பெயரை வைத்து அங்கு வாழ ஆரம்பித்தார் ஜெயலலிதா. ஆனால் போயஸ்கார்டன் வீட்டை தனக்கான ஒரு அடையாள சின்னமாகவே மாற்றினார். ரத்த உறவுகள் ஓடிவந்தன.. வந்த வேகத்திலேயே பறந்து சென்றன... அடுத்தடுத்த ரத்தபந்தமற்ற உறவுகள் வந்தன... ஆக்கிரமித்து கொண்டுவிட்டன.
போயஸ் கார்டன்
இப்போது 16.75 கோடி ரூபாய் காரணம்காட்டி வீடு முடக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக தொண்டர்கள் கொதித்துபோய் உள்ளனர். இதுபற்றி அதிமுக தொண்டர்கள் சிலரிடம் பேசினோம். அப்போது, "கையில் காசில்லை என்றாலும் நாங்கள் கஷ்டப்பட்டு போயஸ் கார்டனுக்கு போய் சேர்ந்துடுவோம்.
கை அசைப்பார்
அம்மாவை பார்க்க ஆர்வமா காத்து கிடப்போம். அம்மா அந்த மாடியில் நின்று எங்களை கைகாட்டுவது ஒன்னு போதும் எங்களுக்கு. எங்கள் மாவட்ட வேலைகளை அப்படி சுறுசுறுப்பா பார்ப்போம். இப்படிப்பட்ட வீட்டை முடக்கிட்டாங்கன்னு சொல்லும்போது தாங்கவே முடியல" என்கிறார்.
இது ஒரு பாரமா?
இது சம்பந்தமாக இன்னொரு அதிமுக நிர்வாகி சொல்லும்போது, "அம்மாவை துதி பாடியே கோடிக்கணக்கான ரூபாயை எவ்வளவோ பேர் சம்பாதிச்சாங்க. அப்படி இருக்கும்போது 17 கோடி ரூபாயெல்லாம் வரி பாக்கி என்பது அவங்களுக்கு ஒரு பாரமா? இந்த விஷயம் அவங்க காதுக்கு போச்சோ இல்லையோ தெரியாது, ஆனா இப்ப இருக்கிறவங்க இதை சரி பண்ணி இருக்கலாமே?
வரி பாக்கி
அம்மா வழியில்தான் ஆட்சி நடத்துறோம்னு சொல்றாங்க. இப்படி 17 கோடி ரூபாயை பாக்கி வெக்கிறது இந்த ஆட்சிக்கும் சேர்த்து அவமானமில்லையா? எத்தனையோ பேருக்கு அள்ளி அள்ளி கொடுத்தாங்க அம்மா, எத்தனையோ பேர் அவங்க பேரை சொல்லி சம்பாதிச்சும் மன்னிச்சு விட்டுட்டாங்க. ஆனா இன்னைக்கு அவங்க பணத்தை பாக்கி வச்சிருக்காங்கன்னு சொல்றதை எங்களால ஏத்துக்கவே முடியல" என்று கொதித்து போய் சொன்னார்.
நடவடிக்கை எடுக்குமா?
தொண்டர்களின் குமுறலுக்கு அதிமுக தரப்பு என்ன பதில் சொல்ல போகிறது? ஜெயலலிதாவின் வீட்டை மீட்க இனி ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? என்பதெல்லாம் இனிதான் தெரியவரும்.