கொரோனா பரவல்.. பண்டிகை நாட்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும்... ஜெ.ராதாகிருஷ்ணன் சொல்லும் காரணம்..!
சென்னை: பண்டிகை நாட்களில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி, நவராத்ரி உள்ளிட்ட பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் பலரும் ஷாப்பிங் செய்வதற்காக வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் பல மாநிலங்களில் பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முன்பைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இது சற்று ஆறுதல் தரும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா விவகாரத்தில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் கொரோனா நம்மை என்ன செய்துவிடும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு குறைந்து கொரோனா நோயாளிகளே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகிட வேண்டும் என்பதற்காக சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாக ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதால் அதனை மனதில் வைத்து இந்த அறிவுரையை ஜெ.ராதாகிருஷ்ணன் நல்கியுள்ளார்.