தமிழகத்தில் மோசமாக பரவும் கொரோனா.. கவனமாக இல்லாவிட்டால் மகாராஷ்டிரா நிலைதான்.. ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளதாகவும் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் இருந்து வருகிறது. மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என சில மாதங்கள் மிகவும் உச்சத்தில் இருந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் 4 இலக்கத்தில் இருந்தது.
ஆனால் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து அன்றாட பாதிப்பு 3 இலக்கத்தில் வந்துள்ளது. அது போல் பலி எண்ணிக்கையும் ஒற்றை இலக்கத்தில் வந்துள்ளது. இதற்காக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் உருமாறிய கொரோனா இங்கிலாந்தில் பரவி வருகிறது.
ஹைதராபாத்
பழைய கொரோனாவை விட மிகவும் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா ஹைதராபாத், தமிழகம், மகாராஷ்டிரத்தில் அதிகமாக இருக்கிறதாம். மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அங்கு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் நிலை குறித்து சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராதாகிருஷ்ணன்
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் தமிழகத்தில் கொரோனா சில வாரங்களாக 450க்கும் குறைவாக இருந்து வருகிறது. சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதியாவது அதிக அளவில் காணப்படுகிறது.
உருமாறிய கொரோனா
ஹைதராபாத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை நிறுத்திவிட்டார்கள். இந்த பழக்கங்களை தொடர்ந்து மக்கள் பின்பற்ற வேண்டும்.
அச்சம்
இல்லாவிட்டால் மகாராஷ்டிராவில் ஏற்பட்டது போல் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்தார். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள். ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்கள் பள்ளி பக்கம் போய் ஓராண்டு ஆவதால் பள்ளிகள் திறந்தால் என்ன செய்வது என மக்கள் கவலையில் உள்ளார்கள்.