ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.. இல்லையெனில் நாளை நடவடிக்கை.. அரசு எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்பவிட்டால் நாளை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்பவிட்டால் நாளை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இவர்கள் வேலை பார்க்கும் இடங்களை நாளை காலியிடங்களாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜாக்டோ ஜியோ தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. அரசு இவர்களின் போராட்டத்திற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து நடந்து வரும் இந்த போராட்டம் தற்போது பெரிதாகி உள்ளது.
இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தையும் இன்னும் நடக்கவில்லை. ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தற்போது ஆசிரியர்கள் எல்லோரும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பல பள்ளிகளில் பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு இன்னும் ஏற்கவில்லை.
ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இந்த போராட்டம் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளையே பணிக்கு திரும்ப வேண்டும்.நாளை பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை ஏதும் இருக்காது. நாளை பணிக்கு திரும்பவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர். உடனே இந்த தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் வேலை பார்க்கும் இடங்களை காலியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கூறியுள்ளார். ஜன. 28க்கு பிறகு இந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.