Jacto Geo: அன்பான வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிடுங்கள்.. அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கோரிக்கை!
தனது அன்பான வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தனது அன்பான வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 9 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. அரசு அதிகாரிகள், தலைமை செயலாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பின் முதல்வர் பழனிச்சாமி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நியாயமான கோரிக்கை
முதல்வர் தனது அறிக்கையில் மக்களை நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும். நியாயமான கோரிக்கைகளை அதிமுக என்று புறக்கணித்தது இல்லை. நாம் எல்லோரும் மக்கள் பணிகளை செய்கிறோம். உரிமைகளை மட்டும் பேசிக்கொண்டு இருப்பது நாம் மேற்கொள்ளும் மக்கள் பணிகளுக்கு பொருத்தமாக இருக்காது
மக்கள் பணி முக்கியம்
மக்கள் பணிகளை நாம் ஒன்றாக சேர்ந்து செய்ய வேண்டும். இதில் தொய்வு ஏற்பட கூடாது. மக்களின் கோரிக்கையை நாங்கள் எப்போதும் நிறைவேற்றி இருக்கிறோம். பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நாம் தீவிரமாக முயல வேண்டும்.
அகவிலைப்படி அதிகம்
அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் அரசு ஏற்கனேவே வழங்கி வருகிறது. கடும் வறட்சியின் பிடியில் தமிழகம் இருக்கிறது. கஜா புயலால் ஏற்கனவே தமிழகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பல மாநிலங்களில் யாருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
கோரிக்கை
ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் ஊதிய உயர்வு நிலுவையை முறையாக அரசு வழங்கியது. இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும். எனது அன்பான கோரிக்கையை ஏற்று நாளையே எல்லோரும் பணிக்கு திரும்ப வேண்டும், என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.