Jacto Geo: தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. முதல்வரின் கோரிக்கையை ஏற்று முடிவு!
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுவோம் என்று அறிவித்து இருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர்.
சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுவோம் என்று அறிவித்து இருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் மிகவும் கொதிப்பான நிலை உருவாகி இருக்கிறது. கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நீதித்துறை பணியாளர்களும், தலைமைச் செயலக ஊழியர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் மூலம் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் இன்று மாலை இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது.
முடிவு
இந்த ஆலோசனையின் முடிவில், தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளனர். இன்று நடந்த போராட்டம்தான் கடைசி என்று தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தோணிசாமி பேட்டி
இது தொடர்பாக தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி அளித்துள்ள பேட்டியில், பிப்.1 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிடுகிறோம். தேர்தல் பணிகள் நிறைய இருக்கிறது, அரசு வேலைகளை நிலுவையில் நிறைய இருக்கிறது.
நிறைய பணிகள்
இதனால் மக்கள் பணிகள் முடங்க வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் மக்களுக்கு பாலமாக செயல்பட விரும்புகிறோம். இதனால் போராட்டத்தை கைவிடுகிறோம். எங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற வேண்டும். போராட்டத்தின் போது பிடிக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப அளிக்க வேண்டும்.
ஊழியர்கள் நடவடிக்கை
அதேபோல் ஊழியர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அவர் பேட்டியில் கூறினார்.