ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்... மதுரை ஹைகோர்ட் தலையிட்டதால் ரத்து
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்ததுபடி, நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்பதால், அரசு இயந்திரம் ஸ்தம்பிக்கும் வாய்ப்புள்ளது.
மதுரை: நாளை முதல் நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை ஹைக்கோட்டின் உத்தரவின் பேரில் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தத்தை அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் இதற்காக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இருப்பினும், முதல்வர் அழைத்து பேசினால் பரீசிலிப்போம் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்திருந்தனர். ஆனால் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், திட்டமிட்டவாறு, டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், வேலைநிறுத்ததிற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நாளை நடக்கும் போராட்டத்தில் 10 லட்சம் ஊழியர்கள் குதிப்பதால், அரசு இயந்திரம் ஸ்தம்பிக்கும். அரையாண்டு தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வுப்பணிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிசம்பர் 10 வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என கேள்வி கேட்டது. இதனையடுத்து தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பு தகவல் தெரிவித்தது.