ஈழப் போர்.. சினிமாத்துறையினர் வாய் மூடி இருத்தலே அறம்.. தனுஷை வச்சு செஞ்ச ஜகமே தந்திரம்!
சென்னை: தமிழீழப் பிரச்சனை தொடர்பான அரைவேக்காடுத்தனமான அறிவை வைத்துக் கொண்டு ஈழ சினிமாவை எடுத்திருக்கிறோம் என இனி யாரும் குதித்துவிடக் கூடாது என்பதற்கான ஆகப் பெரும் படிப்பினையை தருவதற்காகவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் வெளிவந்திருக்கிறது என்றுதான் எண்ண முடிகிறது.
Recommended Video
ஈழப் பிரச்சனையின் ஆதி அந்தத்தையும் யுத்த முடிவையும் ஜஸ்ட் லைக் தட்டாக எடுத்துக் கொண்டு படம் எடுப்பது இந்திய சினிமாவுக்கு முற்றிய வியாதியாகிவிட்டது. கன்னத்தில் முத்தமிட்டால் போல.. அமேசான் பிரைமில் அண்மையில் வெளியிடப்பட்ட தி பேமிலி மேன் வரை இந்த பெருவியாதி வெட்டி அறுக்கப்பட முடியாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
கை கொடுத்த புயல்களால் நிரம்பி வழியும் 49 அணைகள் - இனி தென்மேற்குப் பருவமழையும் இருக்கு
இப்போது இந்த அபத்த குப்பைகளின் உச்சமாகத்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது ஜகமே தந்திரம். தி பேமிலி மேன் சீரியசிலாவது கொள்கைக்காக ஒரு பிரதமரை படுகொலை செய்கிறார்கள் என்ற அட்லீஸ்ட் ஒற்றை ஓட்டை நியாயம் இருந்தது.
வர்த்தக வெறித்தனம்
ஆனால் ஜகமே தந்திரம் படம் வெளிநாடு வாழ் வணிக தரித்திரத்தை மட்டும் வெறித்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறது. அகதிகளைக் காப்பாற்ற, அகதிகளுக்காகவே ஈழத் தமிழர்களை வைத்துக் கொண்டு நுட்பமான கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறாராம் சிவதாஸ் என்கிற ஈழத் தமிழர். ஆகப் பெரும் லண்டனை சேர்ந்த தாதா பீட்டருக்கு சிவதாஸின் கடத்தல் தொழில்நுட்பம் புரிபடாமல் போகிறதாம். அதனால் தமிழ்நாட்டில் இருக்கும் லோக்கல் ரவுடி சுருளி லண்டனுக்கு அழைத்துச் செல்லப்படுகிறாராம். போன சில நாட்களிலேயே லண்டனிலேயே குப்பை கொட்டிய தாதாவுக்கு தெரியாத சிவதாஸின் கடத்தல் தொழில்நுட்பங்களை லோக்கல் புரோட்டா சுருளி கண்டுபிடிக்கிறாராம். பின்னர் பீட்டருக்காக ஈழத் தமிழர் சிவதாஸை போட்டுத் தள்ளும் சுருளி கடைசியில் சிவதாஸை கொன்றதற்கு பரிகாரமாக பீட்டருக்கு வில்லனாகிறார்.. இதுதான் ஜெகமே தந்திரம் கதை.
தொடக்கமே கடுப்பு
படத்தின் தொடக்கமே சொல்லிவிடுகிறது.. தனுஷை வைத்து சரியான காமெடி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் என்பது. அப்புறம் தண்டவாளத்தின் நடுவில் காரை நிறுத்திவிட்டு அசால்ட்டா ரயில் டிரைவர் துணையுடன் ரயிலில் ஏறி போட்டு தள்ளிவிட்டு போவாராம்.. இப்படித்தான் காட்சி அமைகிறது. ஹோட்டலுக்கு லண்டனில் இருந்து ஒருவர் சாப்பிட வருகிறார்; அடிதடி நடக்கிறது என்கிற போதே அடுத்த சீன் அண்ணன் தனுஷ் லண்டனுக்கு போகப் போகிறார். அங்கே போய் தாதாயிசத்தை காண்பிக்கப் போகிறார் என்கிற புரிதல் சாதாரன சாமானியனுக்கும் வந்துவிடும்.
தனுஷுக்கு இறங்குமுகம்
அசுரனிலும் கர்ணனிலும் நெஞ்சை கனக்க வைத்து எத்தனையோ ரசிகர்களின் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு சிறகடித்து பறந்த தனுஷ் எனும் ஆகப் பெரும் கலைஞன் மீது கார்த்திக் சுப்புராஜூக்கு அப்படி என்ன கொலை வெறியோ போயும் போயும் இந்த படத்தில் கோர்த்துவிட்டிருக்கிறார்.
வர்த்தகப் புத்தி
அகதிகள் விவகாரத்தில் இந்தியா கையெழுத்திடாமல் இருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான்; அது நியாயமில்லைதான். அதைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு முன்னர், ஈழத் தமிழர்கள் மீதான கரிசனத்தையே காலி செய்கிற அளவுக்கு அவர்களை நிழல் உலக தாதாக்களாக்கி வைத்திருப்பது எந்த வகையில் சரியாகும்? ஈழத்தின் வலியை, அவலத்தை பற்றி பேசுகிற திராணி இல்லாதவர்கள் வெளிநாட்டில் படத்தை ஓட்டுகிற கருவியாக ஈழத்தைப் பார்க்கிற வர்த்தகப் புத்திக்காரர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு மண்ணும் இல்லை என்பதை நாகரிகமாகத்தான் சொல்ல வேண்டும்.
சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு
இன்னமும் சொல்லப் போனால் ஈழத் தமிழர்களை இப்படி எல்லாம் சித்தரித்து படம் எடுக்கிற துணிச்சல் கார்த்திக் சுப்புராஜூக்கு எப்படி வந்தது? என்கிற கொந்தளிப்பும் கோபமும் நமக்கு மட்டுமல்ல.. சமூக வலைதளங்களின் அத்தனை பக்கங்களிலும் செம காண்டோடு வெளிப்பட்டு வருகிறது. யப்பா சாமீகளா.. ஈழத் தமிழர், ஈழ அரசியல் பற்றி உங்கள் பட்டறிவுக்கு சினிமா எடுத்து தொலைந்தது போதும்.. நீங்கள் சற்றே வாய்மூடி இருத்தலே ஈழ அரசியலுக்கு நீங்கள் செய்யும் நன்றி அறமாக இருக்கும் என்பதுதான் ஜெகமே தந்திரம் படம் பார்த்தவர்களின் ஒட்டுமொத்த கருத்து. சாரி மிஸ்டர் தனுஷ்! உங்களை வெச்சு செஞ்சுட்டாய்ங்க!