மாநிலங்களுக்கு எதிரான முழக்கமாக உருமாறுகிறதா பாஜகவின் ஜெய் ஸ்ரீராம்?
Recommended Video
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் ஜெய் ஸ்ரீராம் முழக்கமானது இந்துத்துவா கொள்கையை வெளிப்படுத்தாமல் மாநிலங்களுக்கு எதிரானதாக முன்வைக்கப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது மேற்கு வங்காளத்தில் பாஜக ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை முன்வைத்தது. இதற்கு அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி ஜெய் காளி என்கிற கோஷத்தை வெளிப்படுத்தினார்.
ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை எழுப்பினாலே சிறைக்கு தள்ளப்படுகின்றனர் என பிரதமர் மோடி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். அத்துடன் மமதா பானர்ஜி செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என முழங்கி வெறுப்பேற்றினர்.
நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என முழங்கினால் நாங்கள் மேற்கு வங்க கலாசாரத்தை முன்னிறுத்துவோம்.. அதனால்தான் ஜெய் காளி என்கிறோம் என்றார் மமதா பானர்ஜி. தற்போது லோக்சபாவிலும் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் தமிழ்நாட்டுக்கு எதிரானதாக முன்வைக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவில் தமிழக எம்.பி.க்கள் அனைவருமே தாய் மொழியான தமிழில்தான் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்தி பேசாத மாநிலங்கள் மீது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தியை மத்திய அரசு திணிக்கும் சூழலில் தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்றனர்.
இதற்கு எதிர்வினையாகத்தான் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என முழங்கினர். இதில் திமுக எம்.பி. கனிமொழி தந்தை பெரியார் வாழ்க என முழக்கமிட்டது பாஜகவினரே எதிர்பாராதது. பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என இந்துத்துவா கொள்கையை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இதுவரை முழங்கி வந்தனர்.
ஆனால் தற்போது மாநிலங்கள் மீதான வெறுப்பை உமிழ்கிற ஒரு முழக்கமாக அது மாறி இருக்கிறது. இதைத்தான் நேற்று லோக்சபாவில் பார்க்க முடிந்தது. அதுவும் ஒரே நாடு.. ஒரே தேர்தல் என பாஜக ஒற்றையாட்சியை நோக்கி செல்லும் நிலையில் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் ஒற்றை இந்தியாவின் முழக்கமா? மாநிலங்களுக்கு எதிரானதா? என்கிற கேள்வியை எழுப்புகிறது.