என்னப்பா இது யூ டர்ன்லாம் போடுது.. அட போலீசை மட்டும் தேடி, தேடி முட்டுது.. தெறிக்கவிட்ட காளை
சென்னை: 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு புரட்சியை யாரும் மறந்திருக்க முடியாது.
சமகால வரலாற்றில் மக்களின் தன்னெழுச்சி புரட்சி ஒன்றாக ஜல்லிக்கட்டு போராட்டம் கருதப்படுகிறது.
உள்ளூர் ஊடகங்கள் மட்டுமல்ல, உலக ஊடகங்கள் அத்தனையும் ஜல்லிக்கட்டு புரட்சியை வியந்து வியந்து கட்டுரைகள் எழுதித் தள்ளின. ஆனால், போராட்டம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட போதிலும் கூட, அது முடித்து வைக்கப்பட்ட முறை என்பது இன்னமும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
தடியடி
ஒரு பக்கம் மக்களின் போராட்டத்திற்கு பணிந்து, அவசரச் சட்டம் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், மற்றொரு பக்கம் மெரினா கடற்கரை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளிலும் போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் போராட்டக் களங்கள் அனைத்தும் போர்க்களங்களாக மாறின.
சிறப்பு
இந்த தடியடி சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. யார் மீது தவறு என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவம் என்பது, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இன்னமும் கூட பகிரப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. ஒருவழியாக, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று சீரோடும், சிறப்போடும், ஆண்டுதோறும் தற்போது ஜல்லிக்கட்டு தமிழகம் முழுக்க நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
வைரல் காளை மாடு
இந்த நிலையில்தான் ஒரு வித்தியாசமான சம்பவம் அரங்கேறி உள்ளது. எந்த ஊர் என்பது சரியாக தெரியவில்லை.. ஆனால் ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. ஜல்லிக்கட்டு காளை ஒன்று வீரர்களின் பிடியிலிருந்து தப்பி, தனது பாதையில் ஓடிக் கொண்டு இருந்தது. வழக்கமாக இவ்வாறு ஓடக்கூடிய காளைகளை, தூரத்தில் நிற்கக்கூடிய உரிமையாளர்கள் கயிறு கட்டி பிடித்துச் செல்வார்கள்.
பெரும் களேபரம்
ஆனால், நாம் வீடியோவில் பார்க்க கூடிய இந்த காளை, திடீரென தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு, ரிவர்ஸ் கியர் போட்டு.. அல்ல.., அல்ல.., யூ டர்ன் போட்டு திரும்பி வரத் தொடங்கியது. கூடியிருந்த மக்களும், மாடுபிடி வீரர்களும், இது என்ன வித்யாசமாக இருக்கிறதே என பரபரப்புடன் அந்த மாட்டையே பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் அந்த மாடு தடுப்புக்கு அந்தப் பக்கமாக போலீசார் குழுமி இருந்த இடத்துக்கு சென்றது. காவல்துறையினரை குறிவைத்து முட்டித் தள்ள தொடங்கியது. இதை பார்த்த போலீசார் பயந்துபோய் அருகிலிருந்த தகர கதவை கொண்டு மாட்டை தடுக்க முற்படுகின்றனர். ஆனால், அந்த கதவை தள்ளிக்கொண்டு மாடு போலீசாரை விரட்டுகிறது. காளையின் ஆவேசத்தை, பார்த்த காவல்துறையினர் அந்த பக்கமும், இந்த பக்கமும் சிதறி ஓடுகின்றனர். சிலர் அங்கேயே நிலை தடுமாறி வருகின்றனர்.
போலீசிடம் அடி வாங்கியவர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீஸ்காரர்களிடம், அடிவாங்கிய யாரோ ஒருவர்தான், இந்த காளையை, இப்படி பழகிக் கொண்டு வந்திருக்க கூடும். எனவேதான், சும்மா சென்ற மாடு கூட, போலீசாரை பார்த்ததும் திரும்பிச் சென்று வம்பு செய்கிறது.. என்ற மெசேஜ்ஜுடன், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.