திடீரென ஒன்று கூடிய ஊர்.. 'கிறீச்' சத்தத்தோடு நிறுத்தப்பட்ட ரயில்.. மறக்க முடியாத மதுரை 'சம்பவம்'
சென்னை: சம கால உலக வரலாற்றிலேயே, பெரும் புரட்சி ஒன்று 2017ம் ஆண்டு தமிழகத்தில் வெடித்து கிளம்பியது. தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுக்க தன்னெழுச்சியாக நடந்த போராட்டம் அது. மெரினா புரட்சி என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கான பெரும் அமைதி, அறவழி போராட்டத்தை மெரினா கடற்கரையும் பார்த்தது.
Recommended Video
அதுவரை, காதலர்கள் கூடி களித்த மெரினா, முதல் முறையாக காளைகளுக்காக, காளையர்கள் ஒன்று கூடியதை பார்த்து பெருமைப்பட்ட தருணம் அது.
மெரினாவில் விழுந்த விதை, தமிழகம் முழுக்க விருட்சமாக துளிர்த்தது. ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது, ஓடி வருகின்ற ரயிலை போராட்டக்காரர்கள் மதுரை வைகையாற்றின் நடுவே தண்டவாளத்தில் உயிரைத் துச்சமென மறித்து நின்ற நாள் ஜனவரி 19.
அதிர வைத்த போராட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் கொஞ்சம் கொஞ்சமாய் சேரத் தொடங்கிய கூட்டம், மதுரைக்கும் பரவி, மதுரையில் அலங்காநல்லூர், தமுக்கம், பெரியார் பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் போராட்டம் வலுக்கத் தொடங்கியது. இந்நிலையில் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி, மதுரை செல்லூர் அருகே வைகையாற்றுக்கு மேலாக தத்தனேரி மற்றும் ராஜாமில் சாலையை இணைக்கும் ரயில் தண்டவாளத்தின் மீது ஏறி செல்லூர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் பிரேக்
இப்போராட்டத்தில் ஆண்களும் பெண்களுமாக 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அச்சமயம், சரியாக பிற்பகல் 2.25 மணிக்கு மும்பை-நாகர்கோவில் ரயில் மிக வேகமாக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. கூடல்நகர் சந்திப்பைக் கடந்து வந்து கொண்டிருந்த இந்த ரயிலின் டிரைவர், வைகையாற்றுத் தண்டவாளத்தின் நடுவே ஆட்கள் இருப்பதுபோன்று தெரிய வரவே திடீரென சுதாரித்து என்ஜினை நிறுத்தினார்.
5 நாள் சம்பவம்
படு வேகமாக வந்து கொண்டிருந்த ரயில், போராட்டக்காரர்கள் குழுமியிருந்த இடத்திலிருந்து சரியாக 100 மீட்டர் தொலைவில்தான் பெரும் சத்தத்துடன் கிறீச்சென்று நின்றது. என்ஜின் டிரைவர் சுதாரிக்காமல் போயிருந்தால், மிகப் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். அப்போது சிறைபிடிக்கப்பட்ட அந்த ரயில் சற்றேறக்குறைய 5 நாட்கள் அங்கேயே மறிக்கப்பட்டது. இதன் காரணமாக, மதுரையிலிருந்து எந்த ரயிலும் வெளியேற முடியாமலும் உள்ளே வர முடியாமலும் ஒட்டு மொத்தமாக முடங்கிப் போனது.
ஜல்லிக்கட்டு
மறியல் செய்த போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதை மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தினர். அன்று மாலை 5.30 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு வந்த மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், போராட்டத்தைக் கைவிடக்கோரி வைத்த வேண்டுகோளை மக்கள் நிராகரித்து போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இந்த ரயில் மறியல் இன்றளவும் நீங்காத நினைவாய் இடம் பெற்றுள்ளது.