இங்க பும்ரா, பும்ரான்னு இந்தியா கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தாரே.. எப்போ வருவார்?
சென்னை: இந்திய கிரிக்கெட் அணி தனது சமகால அதி சிறந்த வேகப்பந்து வீச்சாளரின் திறமையை இழந்து விட்டதோ என்ற அச்சம் பும்ரா பந்துவீச்சை பார்க்கும்போது எழுகிறது.
ஜாகீர் கான் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி கண்ட மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. ஜாகீர் கான் போலவே சிறப்பாக யார்க்கர் வீசி பேட்ஸ்மேன்களை நிலை தடுமாற வைத்தவர் பும்ரா.
கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். எதிரணி வீரர்கள் அவரது பந்து வீச்சை கண்டாலே அஞ்சி நடுங்கும் நிலைமை இருந்தது.
நடிகை குஷ்புவுக்கு திருக்குறள் மூலம் பாஜகவில் சேர தூது விட்ட ஆசீர்வாதம் ஆச்சாரி
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள்
இந்தியா எத்தனையோ மிகச்சிறந்த ஸ்பின் பந்து வீச்சாளர்களை உருவாகியிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் மெக்ராத் போலவோ, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் போலவோ, மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வால்ஸ் போலவா, இலங்கை அணியின் சமிந்தா வாஸ், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், தென் ஆப்பிரிக்க அணியின் ஆலன் டொனால்ட் போலவோ, பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளவே, அஞ்சக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கவில்லை. அந்த குறையை போக்கியது ஜாகீர் கான். இவர் எப்போது யார்க்கர் போடுவாரோ, எப்போது பந்து ஸ்விங்காகி உள்ளே வருமோ என தெரியாமல் பேட்ஸ்மேன்கள் அச்சத்தோடு இருப்பார்கள். இதன்பிறகு, அந்த இடத்திற்கு வந்தவர் ஜஸ்பிரித் பும்ரா.
பும்ரா காயம்
யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடந்த ஆண்டு பிற்பகுதியில் பும்ரா முதுகு பகுதியில் ஏற்பட்ட அழுத்த முறிவு காரணமாக சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. இதன் பிறகு 4 மாதங்கள் கழித்து இந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில்தான் அவர் களமிறங்கினார். ஆனால் அப்போது பார்த்தது பும்ராவை கிடையாது. ஒரு ஓவருக்கு சராசரியாக 8 ரன்களை வாரி வழங்கிய புதிய பும்ரா.
கட்டுப்பாட்டில் இல்லை
நீண்டகால ஓய்வுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருகை தந்ததால் இந்த தடுமாற்றம் இருக்கும் என்று ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டனர். பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தடுமாறினார் பும்ரா. ஆஸ்திரேலிய தொடரில் 14 வைடுகளை வீசியதன் மூலம் தனது திறமையில் பாதியை இழந்துவிட்டார் என்பதை பறைசாற்றினார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 13 வைடுகளை அவர் வீசியபோது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பரிதாப பந்து வீச்சு
விக்கெட் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ரன்களை மட்டுப்படுத்தினாலாவது, பழைய ஃபார்முக்கு திரும்பி விடுவார் என்று எதிர்பார்த்து இருந்தால், ஐபிஎல் தொடரில், பரிதாபம் தோன்றும் அளவுக்கு அவரது ஆட்டம் இருக்கிறது. சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவரில் 43 ரன்களை வாரி வழங்கினார். பும்ரா என்ற பெயருக்குப் பின்னால் இத்தனை ரன்களை பார்ப்பதெல்லாம், காயத்துக்கு முன்பு மிகப்பெரிய அபூர்வமான செயல். எளிதில் நடக்காது.
கடைசி நேரத்தில் தடுமாற்றம்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிகளில் ஆரம்ப கட்டத்தில் அவர் சிறப்பாக பந்து வீசியது போல தெரிந்தது. பழையபடி பார்முக்கு வந்துவிட்டார் என்று மும்பை ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.15 பந்துகளில் வெறும் மூன்று ரன்களைத் தான் விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் கடைசி ஓவரில் ஒரு பவுலரான, கம்மின்ஸ் இவரது ஓவர்களில் சிக்சர் பறக்கவிட்டார். ஓரே ஓவரில் 27 ரன்களை வழங்கினார் பும்ரா. மூன்று ஓவர்கள் நன்றாக வீசி விட்டு நான்காவது ஓவரில் தடுமாறும் போதே, பந்து வீச்சு அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.
ஏதாவது செய்யுங்க பும்ரா
நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் இப்படித்தான் நடந்தது. முதல் இரண்டு ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இருந்தார். நான்கு ஓவர் முடியும் போது அவர் கொடுத்த ரன்கள் 42. விக்கெட் எதையும் அவர் எடுக்கவில்லை. சூப்பர் ஓவரில் பந்து போட வந்த போதும், ஆப் சைடில் பெரும்பாலான ஃபில்டர்களை அருகே நிறுத்தி விட்டு, புல்டாஸாக பந்தை வீசினார். எனவே கோலி அதை எளிதாக லெக் திசையில் பவுண்டரி விளாசி வெற்றிக்கான ரன்னை எடுத்தார். பும்ராவின் கட்டுப்பாட்டில் பந்து இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் இந்த புல்டாஸ். ஓய்வு எடுத்துக்கொண்டாவது ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு, பும்ரா பழைய பன்னீர்செல்வமாக திரும்ப வேண்டும். அல்லது நமது அணி சமகாலத்தில் கண்ட மிகச்சிறந்த ஒரு வேகப் பந்து வீச்சாளர், கண் முன்னாலே கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகும் கொடுமையை நாம் பார்க்க வேண்டி வந்துவிடும்.