அறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட
ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது
சென்னை: நாட்டின் முதல் பிரதமர்.. நவீன இந்தியாவின் சிற்பி.. ஜவஹர்லால் நேருவின் 131வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது! நேருவின் பல முகங்கள் நமக்கு தெரிந்திருப்பினும், அவர் ஒரு மிகச்சிறந்த பத்திரிகையாளர் என்பது பெரும்பாலானோர் அறியாத மறுபக்கம்!
நேருவின் பெருமைமிக்க குடும்பத்திற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு.. தந்தை வழியிலேயே தனயனும் விடுதலை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.. தந்தையும் மகனும் சேர்ந்தே சிறை தண்டனை அனுபவித்த வரலாறும் உண்டு. ஒருமுறை, இருமுறை அல்ல.. 9 முறை கைது செய்யப்பட்டிருக்கிறார் நேரு.. மொத்தம் 12 ஆண்டுகள் சிறையில் வாடியிருக்கிறார். அதுவும் அகமது நகர் கோட்டையில் உள்ள கொட்டடியில் மட்டும் தொடர்ச்சியாக 1040 நாட்களை கழித்திருக்கிறார்.
மிதவாதம், அதிதீவிரத்திற்கு இடைப்பட்ட நிலைப்பாட்டை என்றுமே நேரு மாற்றி கொண்டதில்லை. முதல் பிரதமராக பொறுப்பேற்றார் நேரு.. விடுதலைக்கு முன்பு இருந்த காலகட்டத்தைவிட விடுதலைக்கு பின்பு வந்த காலம் கடினமானது.. கரடுமுரடானது.. எண்ணற்ற சோதனையும் அபாயங்களையும் நேரு சந்திக்க வேண்டியிருந்தது. சுதந்திரம் பெற்றதைவிட, பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கும் கடினமான பணியை திறமையாக நிறைவேற்றினார் நேரு. இந்தியாவை 17 ஆண்டு காலம் நேருவின் தோள்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வெளியுறவு கொள்கை
காங்கிரசில் இருந்த வலதுசாரிகள், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட இடதுசாரிகளும் நேருவுக்கு எதிர்பார்க்க செயல்பட்டனர். இந்தியாவின் அரசியல் பொருளாதார - வெளியுறவு கொள்கைகளையும், அவற்றின் அமலாக்கத்திற்கான நடைமுறைகளையும் ஏறக்குறைய தன்னந்தனியாகவே வகுத்தளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நேருவை சார்ந்தது.
அற்புதம்
நேரு அபாரமானவர்.. அதிசயமானவர்.. அற்புதமானவர்.. அவரது ஆளுமை மகத்தானது.. கோடியில் ஒருவரிடம் கூட காண முடியாது.. காந்தி மீது பாசம் கொண்டார்.. அதே சமயம் நேதாஜியிடம் நட்பு பாராட்டினார்.. பகத்சிங் பாதையை ஏற்க மறுத்தார்.. ஆனால் அவரை நேசித்தார்.. மார்க்ஸை மதித்தார்.. லெனினைக் கற்றார்.. இந்த தேசத்தை- மண்ணை - அதன் மானுடத்தை அளவுக்கு மீறி சிலாகித்தார்.
தொலைநோக்கு திட்டம்
அரசியலில் புதிய பாதையை வகுத்தார்.. பொருளாதார துறையில் புதுமையை வடித்தார்.. அயல்நாட்டுக் கொள்கையில் அதிசயிக்கத்தக்க வழிமுறைகளை வகுத்தார்.. வல்லரசுகளை வெறுத்தார்.. ஏழை நாடுகளுக்காக கவலைப்பட்டார்.. அன்று அவர் வகுத்தளித்த தொலை நோக்குதிட்டம் இன்றும் இந்தியாவிற்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது. தனி உடமையும் வேண்டாம், பொது உடமையும் வேண்டாம்.. கலப்பு பொருளாதாரமே இப்போதைக்கு போதும் என்றார்.. விவசாய பூமியை விஞ்ஞான பூமியாக்கினார்.
பகுத்தறிவாளர்
நேரு ஒரு தூய நாத்திகர்.. உண்மையான பகுத்தறிவாளர்.. வாழ்வின் இறுதிவரை அவரை எந்த மூட நம்பிக்கையும் பழமைவாதமும் அணுவளவுகூட நெருங்கியதில்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக நேரு ஒரு மிகச்சிறந்த பத்திரிகையாளர்.
நேஷனல் ஹெரால்டு
கருத்துக்களை சொல்லவே "நேஷனல் ஹெரால்டு" பத்திரிகையை துவக்கினார்.. தான் ஒருஎழுத்தாளராக வேண்டும் என்று நினைத்து, அதற்காக தனிப்பயிற்சி எடுத்து கொண்டவரல்ல.. மனித நேயத்தோடும், பரந்த மனப்பான்மையோடும், தீமைகளையும், கொடுமைகளையும் கண்டு கொதித்தெழுந்து, ஆவேசத்தோடு அதை மக்களுக்கு அவர்கள் மொழியில் எளிய முறையில் சொல்ல வேண்டும் என்கிற ஆதங்கத்தோடும் எழுத முனைந்தபோது, இயல்பாகவே அவர் எழுத்தாளராக பக்குவப்பட்டு படைப்பாளியாகவே பரிணமித்துவிட்டார் என்பதுதான் உண்மை.
உறுதியானவர்
ஒரு பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்றும்? சக பத்திரிகையாளர்களை எவ்வாறு நடத்த வேண்டும்? பத்திரிகையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு நேருதான் எடுத்துக்காட்டு. ஒரு செய்தியை வெளியிடுகிறதுபோது அதை கிராஸ்செக் செய்து, விருப்பு, வெருப்பு இல்லாமல் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடப்படும் செய்தி குறித்த விமர்சனமும் கருத்தும்கூட சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் நேரு.
நடைமுறை
காங்கிரஸ் தரப்பில் இருந்து பிரிட்டிஷ் அரசு சம்பந்தப்பட்ட ஒரு தகவல் வந்தால்கூட, அதை வெளியிடப் போகிறோம் என்பதை சம்பந்தப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் தெரிவிக்கிற நடைமுறை நேஷனல் ஹெரால்ட் ஆசிரியர் குழு பின்பற்றி வந்தது. ஒருவேளை இந்த செய்திக்கு பிரிட்டிஷ் அரசு மறுப்பு சொன்னால், அதையும் தனது பத்திரிகையில் வெளியிட்டு விடும் நடைமுறையை பின்பற்றினார் நேரு. சுமார் 26 ஆண்டு காலம் இந்த பத்திரிகையின் பொறுப்பாளராக நேரு இருந்துள்ளார்.
தலையங்கம்
ஆனால், 2 முறைதான் ஆசிரியர் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தாராம். அந்த வேண்டுகோள்கூட சொந்த நலனுக்காகவோ, கட்சிக்காகவோ இல்லை.. இரண்டுமே பொது விஷயங்கள்தான். சோவியத் யூனியனுடன் அரசுபூர்வமான உறவை பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கட்டுரை ஒன்று எழுதுமாறும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்லை காந்திகான் அப்துல் கபார்கானை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தலையங்கம் எழுதுமாறும் கேட்டுக் கொண்டாராம். மற்றபடி ஆசிரியர் குழு செயல்பாடுகளில் அவர் தலையிட்டதே இல்லை என்றார் அப்பத்திரிகையின் ஆசிரியர் எம்.சலபதிராவ்.
நிதானம்
மற்றவர்களின் கருத்துகளுக்கு பெரிதும் மதிப்பளித்த நேரு, தன்னை பற்றின விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும், அதையும் சகித்து கொண்டவர்.. நிதானமாகவும், பொறுமையாகவும், அதற்கு பதிலளிக்கவும் அவர் தயங்கியதில்லை. சில சமயம் தன் மீதான விமர்சனங்களை படித்து தன்னையே மறுபரிசீலனை செய்து கொள்ளும் அளவிற்கும் அவர் பக்குவப்பட்டிருந்தார்.
தியாகம்
நேருவின் 50 ஆண்டுகால உழைப்பும், சிந்தனையும், தியாகமும், போராட்டமும், திறம்மிக்க நிர்வாகமும் இந்தியாவின் உறுதிமிக்க நிர்மாணத்திற்கு உருக்காகவும், உரமாகவும் விளங்குகின்றன. இந்தியா இன்று பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறும் நிலையை எட்டியிருக்கிறது என்றால், அதற்கு நேருவின் உழைப்பே காரணம்.. அவருக்கு பின்னால் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என்ற 4 தலைமுறைகள் இந்திய மண்ணுக்கு ரத்தம் சிந்தி இருக்கிறது.
இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் நேரு குடும்பத்தைபோல் தலைமுறை தலைமுறையாய் தன்னைத்தானே சிதைத்து கொண்ட, யாரையாகிலும் நாம் சுட்டிக் காட்ட முடியுமா.. முடியாது.. நிச்சயம் முடியவே முடியாது!