வெறுப்பு பரப்புரை செய்வோர் மீது கடும் நடவடிக்கை தேவை... தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சென்னை: கொரோனா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் மீது குறிவைத்து வெறுப்பு பரப்புரை செய்து வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கொரோனா பரிசோதனை முடிவுகளின் நகலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் அரசு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பரிசோதனை முடிவுகள்
அரசு மற்றும் முஸ்லிம் சமுதாய தலைவர்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 1104 தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் தாமாக முன் வந்து பரிசோதனைக்கு ஆஜராகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லிக்குச் சென்று வந்தவர்களில் கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்து வருகின்றது. இவ்வாறு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பரிசோதனை அறிக்கை முறையாக அளிக்கப்படவில்லை என்று தெரிய வருகின்றது.
வெளிப்படைத்தன்மை
மேலும் ஒரு தரப்பு மருத்துவ ஊழியர்கள் உங்களுக்குத் தொற்று இல்லை என்று சொல்ல மற்றொரு தரப்போ இருக்கின்றது என்று சொல்ல மருத்துவமனையில் உள்ளவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு இலக்காகியுள்ளார்கள். எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். குறைந்த பட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் நகலை அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அச்சம்
இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக செயல்படாதது மக்களிடையே பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் அளித்துள்ளது.
சில அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்படாதவர்கள் என்று அறிவிக்கப்படாதவர்களும் ஒன்றாகவே இன்றும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இது எந்த வகையிலும் நியாயமில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சில அரசு மருத்துவமனைகளில் மருந்துகளும் அளிக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
அதிர்ச்சி
திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு காலாவதியான சோதனை தாள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலும் வருகின்றது. இதுவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கின்றது. இந்த அவல நிலையை நீக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு நோயினால் பாதிக்கப்பட்டவரின் பெயரைப் பகிரங்கமாக வெளியிடுவது சட்ட விரோதமானது.
நடவடிக்கை
ஆனால் தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் முழு விபரங்களுடன் சில மாவட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து உடனடியாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பரிசோதனைக்காக மருத்துவமனையில் வந்தவர்களுக்கு பரிசோதனை எடுப்பதற்கு முன்பாகவே கொரோனா தொற்று இருப்பதாக சமூக விரோதிகள் சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்துள்ள தமிழக அரசு இவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.