ஒவைசி தமிழகத்திற்கு தேவையில்லை... அதிரடி காட்டும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா..!
சென்னை: அசாதுத்தீன் ஒவைசி போன்றவர்கள் தமிழகத்திற்கு தேவையில்லை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நேற்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது அந்த சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து பேசியிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட் கூட கொடுக்கப்படாத நிலையிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக காங்கிரஸ் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார் ஜவாஹிருல்லா. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் கடந்த முறை கொடுக்கப்பட்டது போல் 5 தொகுதிகளோ அல்லது அதற்கு மேல் ஓரிரண்டு தொகுதிகளோ கூடுதலாக கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியாக தெரிகிறது.
இதனிடையே பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஜவாஹிருல்லா அளித்துள்ள பேட்டியில், ''தமிழகத்திற்கு ஒவைசி போன்றவர்களின் தேவை எழவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழகம் முற்றிலும் வேறுபாடு உடையது. இங்கு நீங்கள் எந்த ஒரு இஸ்லாமியர் வீட்டு திருமணத்துக்கு சென்றாலும் அதில் 50 பேராவது இந்து சகோதரர்கள் இருப்பார்கள்.
அதேபோல் இந்து சகோதரர்கள் வீட்டு விஷேசங்களுக்கு சென்று பார்த்தால் அங்கு இஸ்லாமியர்கள் இருப்பார்கள். இப்படி மத மாச்சரியங்களை கடந்து அனைவரும் சகோதரத்துவத்தை பேணி காக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஏற்கனவே இங்குள்ள இஸ்லாமிய இயக்கங்கள் சமூக நீதிக்காக போராடி வருகின்றன.
இதுமட்டுமல்லாமல் திமுக மற்றும் அதிமுகவிலும் சிறுபான்மையின பிரிவை சேர்ந்த பலர் முக்கியப் பொறுப்புகளில் உள்ளார்கள். இதனால் பீகார், உத்தரப்பிரதேசத்தை போன்ற நிலை இங்கு இல்லை.'' எனத் தெரிவித்திருக்கிறார்.