2 அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலை தொடர்ந்து நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்புக்கு பின்பு நடத்தப்பட்ட கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வெளியே கசிய கூடாது என்பதற்காக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
"யாரும் பேசக்கூடாது".. கொஞ்ச நேரத்தில் உடைத்தெறியப்பட்ட அதிமுகவின் உத்தரவு
அமைச்சர்கள் புறக்கணிப்பு
இதனால் எதிர்பார்ப்பு எகிறியது. இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஓஎஸ் மணியன் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் பங்கேற்கவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2 அமைச்சர்கள் பங்கேற்காததது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
ஒற்றை தலைமை தேவையில்லாதது
சென்னை சாந்தோமில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது தேவையில்லா சர்ச்சை. இப்போது உள்ள தலைமையை சிறப்பாக செயல்படுகிறது.
காரணம் என்ன?
உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அமைச்சர் ஓஎஸ் மணியன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை அவர்கள் முறையாக தெரிவித்தனர்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு
ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சந்தித்தது வழக்கமான ஒன்றுதான், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. தேர்தலுக்கு பிறகு அனைத்துக்கட்சியும் கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்றுதான். அதன்படியே அதிமுக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்தது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.
அழைப்பு விடுப்பது சரியாக இருக்காது
மேலும் எல்எம்ஏக்கள் கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் 3 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் 3 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுப்பது சரியாக இருக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அமைச்சரே விளக்கம் கொடுத்துவிட்டார்
அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் பொதுச்செயலளார் என போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், போஸ்டர் விவகாரம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துவிட்டார் என்று கூறினார்.