கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் இருந்த கமல் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு போகிறார் - ஜெயக்குமார்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போல கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் இருந்தார். அறிக்கை மூலம் மட்டுமே அரசியல் செய்து வந்த கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றாலும் அரசியலும் கலந்து பேசுவார் கமல்ஹாசன்.
பிக்பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்கப்போகிறது. இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் கொரோனா விழிப்புணர்வு போல எடுக்கப்பட்டுள்ளது. தப்புன்னா தட்டிக்கேட்பேன்... நல்லதுன்னா தட்டிக்கொடுப்பேன் என்று பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணம்.. நடிகை ரியாவின் சகோதரர் அதிரடியாக கைது.. பரபர தகவல்
பிக்பாஸை கிண்டலடிக்கும் ஜெயக்குமார்
அதிமுக அரசை கமல் விமர்சனம் செய்யும் போதெல்லாம் பதிலடி கொடுப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த சீசன் வெளியான போது பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாச்சார சீரழிவு என்று குறிப்பிட்டிருந்தார் ஜெயக்குமார்.
பிக்பாஸ் வீட்டிற்கு போய் விடுவார் கமல்
கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட் மாதிரி திடீரென கருத்து கூறுவார், அதேபோல் திடீரென காணாமல் போய்விடுவார். தேர்தல் நேரத்தில் மட்டும் வரும் கமல் அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவார். பிக்பாஸ் வீடே அலிபாபா குகை போன்று உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் பயந்து வெளியில் ஓடிவருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்.
கமல் பதிலடி
இதற்கு பதிலடி தரும் விதமாக பேசியிருந்த கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி சமூகத்திற்கு தேவையற்றது என்றால் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியும் அப்படித்தான் என்று கூறியிருந்தார்.
குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது
அரசியல் களத்தில் இருக்க வேண்டுமென்றால், அதிமுக அரசை விமர்சித்தால்தான் முடியும் என்ற நோக்கில் கமல்ஹாசன் பேசி வருகிறார். அவர் என்னதான் தோப்புக்கரணம் போட்டாலும், குட்டிக்கரணம் போட்டாலும், பல்டி அடித்தாலும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கூறியிருந்தார் ஜெயக்குமார்.
பிக்பாஸ் போட முடங்கிய கமல்
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறிப்பிட்ட காலத்தில் ஒளிபரப்பாகவில்லை. லாக்டவுன் தளர்வை அடுத்து தற்போது படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரோமா ஒளிபரப்பாகி வருகிறது. அதனை கிண்டலடித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
மீண்டும் பிக்பாஸ்
இன்று கிண்டியில் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், கொரோனாவிற்கு பயந்து கமல்ஹாசன் வீட்டிற்குள் முடங்கியிருந்ததாக கூறியிருக்கிறார். அறிக்கை மூலமே அரசியல் நடத்தும் கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
களப்பணியாற்றுகிறோம்
நாங்கள் எல்லாம் 150 நாட்கள் உயிரை பணயம் வைத்து களப்பணியாற்றுகிறோம். கமல் என்றைக்காவது ஒருநாள்தான் வெளியே வந்து அரசியல் செய்கிறார். மீண்டும் நூறு நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போகப்போகிறார் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இதற்கு கமல் பதில் என்னவாக இருக்கப் போகிறதோ.