ஓபிஎஸ் நாக் அவுட் ஆகிட்டாரு.. கமல் வாயில அமைச்சர் சுட்ட போண்டா இருந்துச்சா? ஜெயக்குமார் அட்டாக்!
ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் பற்றி ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவைச் சந்தித்து திமுக தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தார் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்தும், கமல்ஹாசன் பிரச்சாரம் குறித்தும், திமுக அரசு பற்றியும் விமர்சனங்களை முன்வைத்தார்.

ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்
சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மார்ச் மாதம் முப்பெரும் விழா நடத்த முடிவெடுத்துள்ள ஓபிஎஸ் அணி, மார்ச் மாதம் விடியல் பிறக்கும் எனத் தெரிவித்தது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ் நாக் அவுட்
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "கூடுவார் கூட சேர்ந்தால் அந்தக் காற்று தான் அடிக்கும் என்று சொல்வார்கள். விடியல் அரசு எனச் சொல்லும் திமுகவோடு சேர்வதால், இவர்களும் விடியல் நடக்கும் என்கிறார்கள். ஓபிஎஸ் திமுகவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் இப்போது ஆட்டக் களத்திலேயே இல்லை, அவர் நாக் அவுட் ஆகிவிட்டார். அவரைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை" என விமர்சித்துள்ளார்.

கமல் விமர்சனம்
மேலும், நேற்று மநீம தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, "விஸ்வரூபம் படத்தின் போது என்னை தடுமாற வைத்து ஒரு அம்மையார் சிரித்தார். அப்போது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கலைஞர் கருணாநிதி பயப்படாதே என்றார். 'உதவி வேண்டுமா' எனக் கேட்டார். 'இது நாட்டுப் பிரச்சனையல்ல என் பிரச்சனை. நான் பார்த்துக் கொள்கிறேன்' என கூறினேன் எனப் பேசினார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஜெயக்குமார்.

ஜெயலலிதா இருக்கும்போதே ஏன் சொல்லல
கமலுக்கு பதிலளித்து ஜெயக்குமார் பேசுகையில், "விஸ்வரூபம் படத்தில் ஒரு சமூகம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக இஸ்லாமியர்கள் புகார் தெரிவித்தனர். ஒரு சமூகத்தினரின் மன உணர்வுகளை புண்படுத்தி பணம் தான் முக்கியம் என்று நீங்கள் நினைத்தால், அரசாங்கம் எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும். உடனடியாக அந்த காட்சிகளை நீக்குங்கள் என படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. காட்சிகளை நீக்கிய பிறகுதான் படம் வெளியிடப்பட்டது. இப்போது இப்படிச் சொல்லும் கமல்ஹாசன், ஜெயலலிதா இருக்கும்போது இதைச் சொல்லி இருக்க வேண்டியது தானே?

அமைச்சர் சுட்ட போண்டா
அப்போது வாயை மூடிக்கொண்டு இருந்தீர்களே? வாயை திறக்க முடியாத அளவுக்கு இப்போதைய திமுக அமைச்சர் சுட்ட போண்டாவை வைத்திருந்தீர்களா? அன்றைக்கு இருந்த நிலையில், ஒரு மதத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தாத வகையில் காட்சிகளை நீக்கி, படத்தை வெளியிடச் சொன்னார். அதன்படியே, காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது. நடந்தது இதுதான். உண்மையைத் திரித்துப் பேசக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.

கொலை கொள்ளை இல்லாத நாளே இல்லை
மேலும் பேசிய ஜெயக்குமார், திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் இல்லாத நாட்களே இல்லை. தினந்தோறும் கொலை , கொள்ளை குறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த ஆட்சியில் காவல்துறை செயல்படவில்லை. இந்த ஆட்சியில் போலீஸ் மூளை செயல்படவில்லை. அதிமுக ஆட்சியில் காக்கிச்சட்டை போடுவது கெளரவமாக பார்க்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஏன் காக்கிச் சட்டை போடுகிறோம் என காவல்துறையினர் நினைக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications