ஓபிஎஸ் கதை முடிஞ்சுது.. இவரு மட்டும் ஜெயிப்பாராம்; மத்தவங்க வெற்றியை கெடுப்பாராம்! சீறிய ஜெயக்குமார்
சென்னை : அதிமுகவைப் பொறுத்தவைரை ஓபிஎஸ், டிடிவி தினகரன் கதை முடிந்த கதை. பொதுக்குழு நீக்கியது என்றால் அதிமுக தொண்டர்கள் நீக்கியதுதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வருவதை ஓ.பன்னீர்செல்வம் விரும்பவில்லை, அவரது மகன் ஜெயிக்கிறார், ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக தோற்கிறது, ஓபிஎஸ் ஜெயிக்கிறார் ஆனால், மாவட்டத்தில் அதிமுக தோற்கிறது, அதிமுக வெற்றியை ஓபிஎஸ் தடுத்துவிட்டார் என விமர்சித்துள்ளார் ஈபிஎஸ் ஆதரவாளரான ஜெயக்குமார்.
மேலும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உதயநிதி தொகுதிக்கு வருவதே கிடையாது. உதயநிதிக்கு படப்பிடிப்புக்கு செல்லவே நேரம் உள்ளது. மக்களை சந்திக்க நேரமில்லை எனச் சாடியுள்ளார்.
மலைமுழுங்கி மகாதேவன்.. "ஆதாரம் இருக்கு" இதுக்கு என்ன சொல்றீங்க?- 'பில்' எடுத்து நீட்டிய ஜெயக்குமார்!
ஜெயக்குமார் மனு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஞ்சலி செலுத்த உள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.
ஓபிஎஸ் கதை முடிந்தது
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "அதிமுகவைப் பொறுத்தவைரை ஓபிஎஸ், டிடிவி தினகரன் கதை முடிந்த கதை. ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது பொதுக்குழு. பொதுக்குழு தான் கட்சியில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு. பொதுக்குழு நீக்கியது என்றால் அதிமுக தொண்டர்கள் நீக்கியதுதான். ஓபிஎஸ் பன்னீர்செல்வம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அவர் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டார்.
மகனும் ஓபிஎஸ்ஸும்
நாடாளுமன்றத் தேர்தலிலில் ஓபிஎஸ்ஸின் மகன் அதிக வாக்குகளில் ஜெயிக்கிறார். ஆனால், அப்போது நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தது. சொந்த ஊரிலேயே அதிமுகவுக்கு எதிராகச் செயல்பட்டார். சட்டமன்றத் தேர்தலிலும் ஓபிஎஸ் தவிர அதிமுக அவரது மாவட்டத்தில் ஜெயிக்கவில்லை. அப்படி என்றால், அவர் அதிமுக ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை." எனத் தெரிவித்தார்.
நிர்வாகத் திறனற்ற அரசு
மேலும் பேசிய ஜெயக்குமார், "திமுக ஆட்சியில் மருத்துவத்துறை முழுமையாக கவனிப்பாரற்று, நிர்வாகத் திறமையின்றி செயல்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு தினந்தோறும் செய்தியாளர்களை சந்திப்பதும், முதல்வருடன் நடைபயிற்சி மேற்கொள்வதும்தான் வழக்கமாக உள்ளது. அரசு மருத்துவமனைகளை ஏழை எளிய மக்கள்தான் தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு சென்ற மாணவி பிரியா உயிரிழக்க வேண்டிய அவசியமே இல்லை. அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை வரும்? குரோம்பேட்டையில் பிறந்த 4 நாட்களே ஆன குழந்தை தவறான சிகிச்சையினால் இறந்துள்ளது. சரியான அளவில் மயக்க மருந்து கொடுக்காததால் எழும்பூர் மருத்துவமனையில் குழந்தை இறந்துள்ளது.
பாராசிட்டமாலே கிடைக்கல
மருந்து தட்டுப்பாடு ஏற்பட்ட இடங்களில் மருந்துகள் விநியோக கழகம் முறையாக மருந்துகளை விநியோகிக்கப்படவில்லை. பாராசிட்டமால் போன்ற சாதாரண மருந்துகள் கூட அரசு மருத்துவமனைகளில் இல்லாத அவல சூழல்தான் உள்ளது. சுகாதார தலைநகரமாக இருந்த சென்னை, தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சரும் சுகாதார அமைச்சரும் இதனைக் கண்டுகொள்வதில்லை. நடைப்பயிற்சியின் போது கூட மக்கள் பிரச்சினையை பேசாமல் தனது மகன் உதயநிதி நடித்த கலகத் தலைவன் குறித்துதான் முதல்வர் பேசுகிறார்.
உதயநிதி பற்றி
இதுதான் நாட்டிற்கு முக்கியமான பிரச்சினையா? நடிகை விவகாரத்தில் சின்னவர் கோபித்துக் கொள்ளக் கூடாது என அமைச்சர் விளக்கமளிக்கிறார். கொரோனா காலத்தில் தட்டம்மை தடுப்பூசி செலுத்தாததன் காரணமாக குழந்தைகளுக்கு தட்டம்மை பரவி வருகிறது. மெட்ராஸ் ஐ-யை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவத்துறை பிரச்சனைகள் நிறைய இருக்கிற சூழலில் மருத்துவர்களை மிரட்டுவது, இடமாற்றம் செய்வது போன்றவை நடக்கிறது. மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது. கொரோனாவை பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் எடுத்த நடவடிக்கையால் திமுக அரசு தப்பித்துவிட்டது. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
அதிமுக ஆட்சியில் சரியாக நடந்தது
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை கருத்தில் கொண்டு அந்த தவறு மீண்டும் நடைபெறாத வகையில் அரசு செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்தவர்கள் விவகாரத்தில் நடுநிலையுடன் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனகள் குறித்து எவ்வித குற்றச்சாட்டும் எழவில்லை. குற்றச்சாட்டுகள் எழாமல் பணிபுரிவது அரசின் கடமை. அதிமுக ஆட்சியில் அனைத்தும் சரியாகவே நடந்தது.
உதயநிதிக்கு ஒரு நியாயம்
உதயநிதி பிறந்தநாளுக்காக சென்னை முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்? எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா? பேனர்கள் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்தால் அந்த அனுமதியை எங்களுக்கும் கொடுங்கள். இதுகுறித்து மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உதயநிதி ஸ்டாலின் தொகுதிக்கு வருவதே கிடையாது. உதயநிதிக்கு படப்பிடிப்புக்கு செல்லவே நேரம் உள்ளது. மக்களை சந்திக்க நேரமில்லை. மன்னராகவும், இளவரசராகவும் தான் வலம் வருகின்றனர். முதலமைச்சரின் தொகுதியிலும் உதயநிதி தொகுதியிலும் நிறைய பிரச்சினைகள் உள்ளது.
மன்னராட்சி
ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும். அதற்கான முழுமுயற்சியை திமுக அரசு எடுக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டை வளர்த்து விடுகின்ற வேலையைத்தான் திமுக அரசு செய்கிறது. திமுக அரசு மக்களாட்சி கிடையாது. மன்னராட்சி என்பதால் வாரிசு அரசியலை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது" எனத் தெரிவித்தார்.