சென்னை மெட்ரோ ரயில்...ஆதரித்தவர் கருணாநிதி...எதிர்த்தவர் ஜெயலலிதா...திமுக எம்.பி. கேள்வி!!
சென்னை: ''சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் கலைஞர். ஆனால் எதிர்த்தவர் மறைந்த முதல்வர் மேடம் ஜெயலலிதா. இந்த நிலையில் அந்த ரயில் நிலையத்துக்கு ஜெயலலிதாவின் பெயர் வைத்திருப்பது முரணானது'' என்று தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை யார் கொண்டு வந்தது என்பது இன்று, நேற்று அல்ல. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே விவாதப் பொருள் ஆகி இருக்கிறது. அவரே கேள்வியும் எழுப்பி இருந்தார். அதிமுக ஆட்சியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது என்றால் எந்த ஆண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதா. எந்தெந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூற முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கான விளக்கத்தையும் அவரே கொடுத்து இருந்தார். 2006ம் ஆண்டில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த ஆட்சிப் பொறுப்புக்கு திமுக வந்தவுடன்தான் தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை தயரிக்கப்பட்டது. இந்த திட்டம் டெல்லி மெட்ரோ ரயில் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்து இருந்தார்.
குறையும் ஆக்சிஜன்.. அதிகாலையில் நிகழும் கொரோனா மரணங்கள்.. தமிழகத்தை உலுக்கும் ஹாப்பி ஹைபாக்ஸ்மியா!
இதற்குப் பின்னரும், ''மெட்ரோ ரயில் எனது தந்தையின் மூளையில் இருந்து பிறந்த குழந்தை'' என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி இருந்தார். இதுவும் விவாதத்துக்கு உள்ளானது. தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழசை சவுந்தரராஜன், ''ஆதரவற்றுக் கிடந்த குழந்தையை எடுத்து ஊட்டச்சத்து கொடுத்து வளர்த்தது, பாஜகவும் ஜெயலலிதாவும்தான்'' என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் சி.எம்.பி.டி. மெட்ரோ ரயில்நிலையத்திற்கு, ''புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்துநிலைய மெட்ரோ'' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுவும் விவாதமாகி இருக்கிறது. தருமபுரி தொகுதி திமுக எம்.பி.யும், மருத்துவருமான செந்தில்குமார் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், ''சென்னை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஜெயலலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது முரண்பாடாக இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் கலைஞரின் முன்னெடுப்பு. மேடம் ஜெயலலிதா மெட்ரோ ரயிலை எதிர்த்து, மோனோ ரயிலை ஆதரித்தவர். இதற்கான சான்று எனது பதிவில் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். சான்றுகளாக இந்து பத்திரிக்கையில் வெளியாகி இருந்த செய்திகளை செந்தில் குமார் இணைத்துள்ளார்.