ஜெயலலிதா பிறந்த நாள்.. எடப்பாடியார், ஓபிஎஸ் இணைந்து ஜெ. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Recommended Video
ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்களும் பங்கேற்றனர்.
ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும், மாலையில் வீடுகளில் விளக்கு ஏற்றி, அதிமுகவை காப்போம் என உறுதியேற்போம் என அக்கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று, அதிமுக தனது விருப்ப மனு வினியோகத்தையும் துவங்க உள்ளது. ஜெ. பிறந்த நாளில் சென்டிமென்டாக விருப்பமனு வினியோகம் துவங்குகிறது. மார்ச் 5ம் தேதிவரை விருப்ப மனு வழங்கப்படும்.
எடப்பாடி தொகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமியும், போடிநாயக்கனூர் தொகுதிக்கு ஓபிஎஸ்ஸும் விருப்பமனுவை அளிக்க உள்ளனராம். இதன்பிறகு பிறர் வழங்குவார்கள்.
ஜெ. நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதையும் முதல்வரும், துணை முதல்வரும் துவக்கி வைக்க உள்ளனர். ஜெ. பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும். அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழான நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் தயாரித்துள்ள பிறந்த நாள் விழா சிறப்பு மலரையும், முதல்வர், துணை முதல்வர் வெளியிட உள்ளனர்.