ஜெ. ஜெயலலிதா எனும் அதிசயம்… மறக்க முடியாத பிப்.24.. மாறிவிட்டதா அதிமுக நிலை.. ஓர் அலசல்
சென்னை:ஆண்கள் மட்டுமே களம் கண்ட... அரசியல் காட்டாற்றில் தனிப்பெரும் சக்தியாய்.... வாழ்க்கையின் இறுதி நிமிடம் வரை போராடி வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணியாய் திகழ்ந்த அவரை அத்தனை சீக்கிரம் தமிழகம் மறந்துவிடுமா என்ன? இதோ அவரது பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு.
அம்மா... என்ற லட்சக்கணக்கணக்கான தொண்டர்களின் அன்புக்குரிய ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. அதிமுகவை புரட்சி தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய போது, அனைவரும் எதிர்பார்த்தபடியே மக்கள் செல்வாக்கால் அந்த கட்சி வளர்ந்தது.
அதுவரை தமிழகத்தில் கோலோச்சி இருந்த திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும்.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர். ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவின் முகமாக ஜானகி வருவார் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.
அதிமுகவில் ஜெயலலிதா
அதேசமயம் இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதா அதிமுகவில் வளர்ந்து வந்தார். 1981ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப் பட்டது. பின்னர், சத்துணவு திட்ட உயர்மட்ட குழு உறுப்பினரானார்.
எம்பி பதவி
அதன் பிறகு தமிழகமெங்கும் எம்ஜிஆருக்காக சூறாவளியாய் சுழன்று பிரசாரம் செய்தார். அவரது வேகத்தையும், ஈடுபாட்டையும் கண்டு ஆச்சரியமடைந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவை எம்பியாக்கி ராஜ்ய சபாவுக்கு அனுப்பினார்.
இருக்கை எண்
அங்கு ஜெயலலிதாவுக்கு முதன்முதலாக ஒதுக்கப்பட்ட இருக்கை எண் பேரறிஞர் அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண்ணான 185. அண்ணா எப்படி தமது முதல் உரையில் அகில இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தாரோ, அதே போல் பிரதமர் இந்திரா காந்தி உட்பட அனைவரையும் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் திரும்பி பார்க்க வைத்தன.
அணிகள் உருவாக்கம்
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்து ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெ தலைமையில் ஒரு அணியும் உருவானது. அப்போது ஜானகியுடன் எம்ஜிஆரின் வலது கை என்று வர்ணிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.
கட்டுப்பாடு
ஜெயலலிதாவுடன் திருநாவுக்கரசர், நடராஜன் (சசிகலாவின் கணவர்), சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர். அதன் பிறகு அதிமுக ஜெயலலிதா தலைமையின் கீழ் வந்து, அக்கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் வைத்து இருந்தார் என்பது தெரிந்த ஒன்று.
ஜெயலலிதாவின் ஆளுமை
எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தில் யார் யாரெல்லாம் ஜெயலலிதாவை அவமானப் படுத்தினார்களோ அவர்களெல்லாம் பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு கட்டுப்பட்டு இருந்தனர். ஒரு பெண்ணாக, அத்தனை ஆண்களை தனது ஆளுமையின் திறனால் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இட ஒதுக்கீடு நடவடிக்கை
ஜெயலலிதா திராவிட கொள்கைகளுக்கு எதிரானவர் என்று பலர் கூறினாலும், பெண் உரிமை உள்ளிட்டவைகளுக்கு அவர் பெரிய பங்காற்றி இருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 69% இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.
மத்திய அரசை நிர்ணயித்தவர்
தமிழகத்தின் தலைவர் ஒருவர் மத்தியில் அமையும் ஆட்சியை தீர்மானித்து, பிறகு தானே அந்த ஆட்சியை கலைத்ததெல்லாம் இந்திய அரசியல் வரலாற்றில் மிக அழுத்தமாக பதிவு செய்யப் பட்ட ஒன்று. அந்த சாதனைக்கும் மூலக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா.
மோடியா.. லேடியா?
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் மோடி என்ற அலை வியாபித்து இருக்க அந்த சமயத்தில்,ஒற்றை ஆளாக நின்று,மோடியா? லேடியா? என்று முழங்கியவர். பிரதமராக இருக்கட்டும், தேசிய கட்சிகளின் தலைவர்களாக இருக்கட்டும் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, ஜெயலலிதா நினைத்தால் மட்டும்தான் அவர்கள் போயஸ் இல்லம் வர முடியும்.
சர்வதேச அரசியல்
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு உள்ளிட்டோர் ஜெயலலிதாவை பார்த்த போதெல்லாம் ஒட்டுமொத்த அரசியலுமே அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது.பின்னர் அவரின் ஆளுமையை அறிந்து ஒட்டு மொத்தமாக கொண்டாடியது.
மறைந்தார் ஜெயலலிதா
எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் நூறாண்டுகள் இருக்க வேண்டும் என்றார். தற்போது.. அவர் மறைந்துவிட்ட நிலையில்.. அதிமுகவின் செயல்பாடுகளை கண்டு அக்கட்சியினரே மனம் நொந்து போய் உள்ளனர். தலைமை இல்லாத கழகம் தள்ளாடி போயிருக்கிறது என்றும் மனம் வெதும்பி உள்ளனர்.
வெற்றிடம்
அவரது இழப்பை அக்கட்சி எப்படி பார்த்து வருகிறதோ இல்லையோ... நடப்பு கால அரசியலை கண்ட வெகுஜன மக்கள்.. அந்த வெற்றிடத்தை உணர்ந்துள்ளனர். அவர் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
அதிசயங்களின் அதிசயம்
மீண்டும் நிகழ்ந்துவிட முடியாத அதிசயங்களின் அதிசயம் தான் ஜெயலலிதா. இனி எந்த சந்தர்ப்பத்திலும் கேட்க முடியாத குரல்... தான்.. அவரின் ஜெ ஜெயலலிதா என்னும் நான்...!