ஜெ. மரணம்.. ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த சுகாதாரத் துறை செயலாளர்
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் பல்வேறு தகவல்களை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆஜராகினார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாதது உள்பட பல்வேறு கேள்விகளை ஆணையம் எழுப்பியது. ராதாகிருஷ்ணனிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் குறுக்கு விசாரணை செய்தார்.
சிகிச்சை
ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிச்சை வழங்கப்பட்டது. எனது மனசாட்சிக்கு உள்பட்டு அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளித்தோம். அவர் சிகிச்சை பெற்ற போது எனது தாயார் இறந்துவிட்டார்.
முயற்சிகள்
எனினும் குறுகிய கால விடுப்பு எடுத்து தாய்க்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து விட்டு உடனே பணிக்கு திரும்பினேன். ஜெயலலிதாவை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன் என்றார்.
தெரிவிக்கவில்லை
ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு சந்தேகம் இருந்ததா என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லை என்று ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். அது போல் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கலாம் என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டீர்களா என்ற கேள்விக்கு அதுகுறித்து தெரிவிக்கவில்லை என்று பதில் அளித்தார்.
வாக்குமூலம்
ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இந்த கேள்வியை கேட்டபோது வெளிநாட்டு சிகிச்சை குறித்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவித்தேன் என முரணான வாக்குமூலத்தை ராதாகிருஷ்ணன் அளித்துள்ளார்.