ஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி சேஷசாயி, முன் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, தீபக் தரப்பு வழக்கறிஞர், தங்களை வாரிசாக அறிவித்த உத்தரவில், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த யோசனையை தீவிரமாக பரிசீலித்து வருவதாக அரசு தெரிவித்த நிலையில், அவசர அவசரமாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் உடமைகள் மட்டுமல்லாமல், தங்கள் பாட்டியின் உடமைகளும் இருப்பதாகவும், ஜெயலலிதா பயன்படுத்திய கார்களின் நிலை பற்றி அரசு அறிவிக்கவில்லை என கூறினார்.
90 நாட்களில் உள்ளிருக்கும் பொருட்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார். கார்கள், பொருட்கள் பற்றி சட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லை எனவும், தங்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். 2017ல் அறிவிப்பு வெளியிடப்பட்டும், தங்களை வாரிசாக அறிவித்த பின்னர்தான் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாகவும், வழக்கு பிப்ரவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசு ஏன் பொறுத்திருக்க கூடாது என தீபக், தீபா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கார்கள் ஜெயலலிதாவின் பெயரில் இருந்தால் அதற்கான பதிவு எண்களை தெரிவிக்க வேண்டும் எனவும், சமூகத்துக்கு குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கிய ராஜாஜி, காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆ.ர். வீடுகள் நினைவில்லமாக மாற்றியதைப் போல ஜெயலலிதாவின் வீட்டையும் மாற்ற முடிவு செய்ததாகவும், வீட்டில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப் போவதில்லை என தெரிவித்தார். எந்த வகையிலும் மனுதாரர் பாதிக்கப்படவில்லை என்றும், வீட்டிலேயே இதுவரை மனுதாரர்கள் நுழையவில்லை என்ற செய்திகளும் உள்ளதாகவும், இருவரின் கருத்துகளும் கேட்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
ஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்.. தொண்டர்கள் ஆரவாரம்
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் இதுவரை யாரும் வசிக்கவில்லை எனும் போது ஏன் பொறுத்திருக்க கூடாது எனவும், ஒரு வேளை கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள் என அரசு தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில், மூன்று ஆண்டுகளாக கையகப்படுத்த நடவடிக்கையில் அனைத்து சட்டவிதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், வீடு மனுதாரர்களின் வசம் தற்போது இல்லை என்றும், அரசின் வசம் உள்ளதாகவும், நாளை திறந்து நினைவு இல்லமாக அறிவிக்கப் போவதாகவும் விளக்கம் அளித்தார்.
இருவரும் விசாரானையில் அவர்கள் பங்கேற்றதாகவும், ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றப்படுகிறதே தவிர, வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படவில்லை என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து இன்று மாலை இந்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அதேநேரத்தில் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.