ஜெயலலிதா நினைவிடம்... பணிகள் முடியாததால் தள்ளிபோகும் திறப்பு விழா
சென்னை: சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் இம்மாதம் 24-ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மேலும் சில நாட்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வந்தன. ஜார்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் கட்டிடப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. அதனை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராஜ்மோகன் மற்றும் மூத்த அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் குழு நாள்தோறும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அங்கு நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வந்தது.
இந்நிலையில் கட்டுமானப்பணிகளில் 85 % நிறைவடைந்துவிட்ட நிலையில் சூப்பர் ஸ்ட்ரக்சர் என்றழைக்கப்படும் பீனிக்ஸ் பறவை இறக்கை மாதிரி அமைப்பதில் தான் சிக்கல் எழுந்துள்ளது. இது சவாலான பணி என்பதால் துபாயில் இருந்து அண்மையில் கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்துள்ள ஆலோசனைப்படி இப்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிவடைய இன்னும் இரண்டு மாதம் முழுமையாக ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் அதன் திறப்பு விழா நிகழ்ச்சியும் தள்ளிப்போகும் என தெரிகிறது.
ஜெயலலிதா பிறந்தநாள் இம்மாதம் 24-ம் தேதி வருவதால் அன்றைய தினமே அவரது நினைவிடத்தையும் திறந்து வைக்க வேண்டும் என எண்ணினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் கட்டுமானப் பணிகள் காரணமாக இம்மாதம் அந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க டெல்லியில் இருந்து யாரையாவது அழைத்து வரலாம் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மேற்கொள்ளும் முயற்சிக்கு இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. துணை குடியரசுத்தலைவர் வெங்கையநாயுடு கூட இதுவரை எந்த உறுதியும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்னும் 15 நாட்களில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக தொண்டர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.