ஜவ்வுமிட்டாய் போல் இழுக்கும் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள்..!
சென்னை: சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளை எட்டியும் இன்னும் பணிகள் முழுமையடையாத நிலைதான் உள்ளது.
தொடக்கத்தில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்று வந்த நிலையில் இப்போது அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானப் பணிகள் காரணமாக அதிமுகவினர் கூட சுதந்திரமாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத சூழல் உள்ளது.
வெற்றிடம் திமுகவில் இல்லை.. முக ஸ்டாலின் தன் தலைமையை நிரூபித்துள்ளார்.. தங்க தமிழ்செல்வன் அதிரடி
இரண்டு ஆண்டுகள்
கடந்த 2018 மே மாதம் 7-ம் தேதியன்று சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பீனிக்ஸ் பறவை வடித்தத்தில் உருவாக்கப்படும் இந்த நினைவிட கட்டுமானப்பணிகளுக்காக தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியது. மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நினைவிட கட்டுமானப் பணிகள் படு தீவிரமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ஆனால் கடந்த 3 மாதகாலமாக நிலைமை அப்படியே தலைகீழாக மாறி பணிகள் மந்தகதியில் உள்ளன.
அஞ்சலி
மறைந்த கருணாநிதியின் நினைவிடத்தில் நாள்தோறும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செல்லும் வண்ணம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கட்டுமானப் பணிகள் நடப்பதால் அங்கு அதிமுகவினரால் கூட சுதந்திரமாக சென்று தங்கள் தலைவிக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை உள்ளது. காரணம் கட்டுமானப் பணி மேற்கொள்ளும் நிறுவனத்தின் அதிகாரிகள் பணிகள் நடைபெறுவதால் யாரையும் அனுமதிப்பதில்லை.
கால்வாசி
ஜெயலலிதா நினைவிடத்தில் 80% பணிகள் முடிந்துவிட்டதாகவும், இன்னும் 20 % பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதுவும் பீனிக்ஸ் பறவை இறக்கை போன்ற அமைப்பை வடிவமைப்பதில் தான் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதையும் துபாயிலிருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிவடையும் எனத் தெரிகிறது.
திறப்பு விழா
மெரினாவில் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் சென்னையின் புதிய அடையாளமாக மாறும் என்றும், விரைவில் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா நடைபெறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் அதிமுக மகளிரணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர். இதனிடையே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களின் முகப்பில் உள்ள ஆர்ச் மற்றும் இரட்டை இலை சின்னத்தை புதுப்பொலிவுடன் வைக்க பணிகள் நடக்கின்றன.