அதிமுக ஆயிரம் காலத்துப்பயிர்... தழைத்து நிற்கும் ஆலமரம் - ஓபிஎஸ் இபிஎஸ் உறுதிமொழி
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.அதிமுக என்பது ஆயிரம் காலத்துப்பயிர், தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற தழைத்து நிற்கும் ஆலமரம் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற உழைப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம்ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலையில் அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் மரியாதைச் செலுத்தினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதால், இதில்அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறிப்பிட்ட அளவே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தின் இரும்புப்பெண்மணி ஜெயலலிதா நினைவு தினம் - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன அம்மா
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க முதல்வர் பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் என அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.
வாழ்வின் 34 ஆண்டுகள் கட்சிக்காக அர்ப்பணித்து வாழ்ந்த ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றிட உறுதிமொழி ஏற்போம். அதிமுக என்பது ஆயிரம் காலத்துப்பயிர், தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற தழைத்து நிற்கும் ஆலமரம் என்ற ஜெயலலிதாவின் முழக்கத்தின் படி, மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற உழைப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.