ஜனவரி 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா..!
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை, 27.01.2021-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் என பலரும் பங்கேற்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ரூ.50 கோடி திட்ட மதிப்பில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 4 ஆண்டுகளாக இரவும் பகலும் நடைபெற்ற பணிகள் காரணமாக இப்போது அந்த பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.
பீனிக்ஸ் பறவை இறகு போன்று ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். இதற்காக துபாயில் இருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் பீனிக்ஸ் பறவையின் இறகு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24-ம் தேதி வரும் நிலையில் அன்றைய தினம் நினைவிடம் திறப்பு விழா இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே அதாவது வரும் 27-ம் தேதியன்றே ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி குழப்பமும், சசிகலா வருகையும் ஒரு காரணமாக இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால் எந்நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் இப்போதே திறப்பு விழாவை நடத்திட முடிவு செய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.