விழுப்புரம் புதிய பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர்...? ஆலோசனையில் முதலமைச்சர்..!
சென்னை: விழுப்புரத்தில் புதிதாக தொடங்க இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவது குறித்த ஆலோசனையில் உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே ஜெயலலிதா பெயரில் நாகையில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால் மீண்டும் ஜெயலலிதாவின் பெயர் சூட்ட முடியுமா என்பது பற்றி விவாதித்து வருகிறார்.
இதனிடையே விழுப்புரத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகத்திற்கு வன்னிய சமுதாய தலைவரும், அண்ணாவின் நண்பருமான ஏ.கோவிந்தசாமி பெயரை சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை.. வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி
விழுப்புரத்தில் உதயம்
வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பதாக நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கல்வி வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாவட்டமான விழுப்புரம் மேம்பட வேண்டும் என்பதற்காகவும், நிர்வாக முறை எளிதாக இருப்பதற்காகவும் இந்த பிரிப்பு நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனுக்கு விளக்கம் அளித்தார்.
யார் பெயர்
விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த அரை மணி நேரத்தில் வரவேற்பும், நன்றியும் தெரிவித்து ட்வீட் வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். கூடவே புதிய பல்கலைக்கழகத்திற்கு யார் பெயரை சூட்ட வேண்டும் என்ற விவரத்தையும் அவர் வெளியிட்டிருந்தார். விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட்டவரும், அண்ணாவின் நண்பருமான ஏ.கோவிந்தசாமி பெயரை அந்த பல்கலைக்கழகத்திற்கு சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
முதல்வர் ஆலோசனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை ஜெயலலிதா பெயரை சூட்டுவதற்கான ஆலோசனையில் உள்ளார். ஆனால் ஏற்கனவே நாகையில் செயல்பட்டு வரும் மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதால் விழுப்புரம் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் அவர் பெயர் சூட்டுவது சாத்தியமா என்பது பற்றி விவாதித்து வருகிறார்.
கோவிந்தசாமி பெயர்
ஏ.ஜி. என்றழைக்கப்படும் வன்னிய சமுதாய பெருந்தலைவர் ஏ.கோவிந்தசாமியின் பெயரை சூட்ட வேண்டும் என்பதே பாமகவின் வேண்டுகோள். இதனிடையே விழுப்புரத்திற்கு புதிய பல்கலைக்கழகம் பெற்றுத்தந்ததால் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அரசியல் கிராஃப் பொதுமக்கள் மத்தியில் சற்று ஏறத்தொடங்கியுள்ளது. நேற்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது முதல் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பரப்புரையை தொடங்கிவிட்டனர்.