Exclusive: சசிகலாவை சந்திப்பது பற்றி முடிவெடுக்கவில்லை... ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஓபன் டாக்..!
சென்னை: அரசியலில் தனக்கு ஆர்வமில்லாத காரணத்தினாலேயே அதிலிருந்து விலகியதாகவும் மற்றபடி தன்னை யாரும் நிர்பந்திக்கவில்லை எனவும் கூறுகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.
மேலும், சசிகலாவை சந்திப்பது பற்றி இன்னும் தாம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் சசிகலா அழைத்தால் அது பற்றி யோசிப்பேன் எனவும் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு ஜெ.தீபா அளித்துள்ள பிரத்யேக பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: சசிகலாவை நீங்கள் சந்திப்பீர்களா..?
பதில்: சசிகலா சென்னை வந்திருப்பதை செய்தி தொலைக்காட்சிகளில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன். இதுவரை இது தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை. சசிகலாவே அழைத்தால் அவரை சந்திப்பது பற்றி முடிவெடுப்பேன். அதுவரை இதை பற்றி சொல்ல ஒன்றுமில்லை.
கேள்வி: உங்கள் தம்பி தீபக் சசிகலாவை சந்திப்பார் போல் தெரிகிறதே..?
பதில்: ஜெ.தீபக் ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவை சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறார், சசிகலாவுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். இதிலென்ன ஆச்சரியம். என்னை எடுத்துக்கொண்டால் நான் தான் சசிகலாவுடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறேன். நீங்கள் கேட்பது போல் பலரும் சசிகலாவை சந்தீப்பிர்களா என என்னிடம் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். சசிகலா தனது விருப்பத்தை தெரிவித்தால் அதற்கேற்ற முடிவை நான் எடுப்பேன்.
கேள்வி: போயஸ் கார்டன் வேதா நிலையம் விவகாரம் என்ன நிலையில் உள்ளது..?
பதில்: வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு தடை இருக்கிறது. இந்த வழக்கும் வரும் 24-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதனால் நீதிமன்றத்தில் உள்ள இந்த விவகாரம் பற்றி மேற்கொண்டு பேசுவது முறையல்ல.
கேள்வி: அரசியலிலிருந்து நீங்கள் திடீரென பின்வாங்கியதற்கு என்ன காரணம்..? அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்..?
பதில்: பின்வாங்கினேன் என்று நீங்கள் சொல்வது தவறு. வேண்டாம் என்று நான் தான் விலகினேன். யாருக்கும் பயந்து பின்வாங்கவில்லை. அத்தை இறந்த தருணத்தில் அரசியலை பற்றி முழுமையாக அறியாமல் சிலர் வலியுறுத்தியதால் அரசியலில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் உள்ளே சென்ற பிறகு தான் அதிலுள்ள சவால்கள், எதிர்ப்புகள், உள்ளிட்டவைகளை அறிந்துகொண்டேன். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. இதனால் வேண்டாம் என ஒதுங்கினேன். அரசியலில் இருந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லை, அறக்கட்டளை அமைத்து கூட உதவலாமே.
அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு நோட்டீஸ்... கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது ஐகோர்ட்டில் வழக்கு!
கேள்வி: ஒபிஎஸ்-இபிஎஸ் - சசிகலா, இதில் உங்கள் சாய்ஸ் யாராக இருக்கும்..?
பதில்: இது என்ன கேள்வி...(சிரிக்கிறார்), எனது 14-வது வயதில் இருந்து சசிகலாவை தெரியும். அதற்கு பிறகு தான் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் உள்ளிட்டவர்களை தெரியும். அரசியலில் யாரும் கெட்டவர்கள் என்று கூற முடியாது. அவரவர் சூழலுக்கு ஏற்ப செயல்படுகிறாகள். இதில் அவர் நல்லவரா இவர் நல்லவரா என்று கூற இயலாது.
கேள்வி: ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்ட பிறகு நீங்கள் ஏன் செல்லவில்லை..?
பதில்: (ஜெயலலிதா)அத்தையுடைய நினைவிடம் திறப்பு விழாவுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த நான் உட்பட யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. சரி மற்றொருநாள் செல்லலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் அத்தையின் நினைவிடம் மூடப்பட்டுவிட்டது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.