முதல்வரின் பாச வலையில் பூங்குன்றன்.. இ.பி.எஸ்.க்கு வரவேற்பு கவிதை
Recommended Video
சென்னை : ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த அணியிலும் சேராமல் இருந்துவந்த அவரது உதவியாளர் பூங்குன்றன், முதன்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புகராழம் சூடியுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை போயஸ் கார்டன் பூங்குன்றனின் அறிமுகத்துக்காக அதிமுகவில் காத்திருந்தவர்கள் பலர். ஜெயலலிதாவிடம் நேரடியாக பேசக்கூடிய இடத்தில் இருந்ததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் என அனைவரும் பூங்குன்றனை கண்டால் விழுந்து விழுந்து மரியாதை செய்தது ஒரு காலம்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நிலைமை அப்படியே தலைகீழானது. பூங்குன்றன் என்றால் யார் எனக் கேட்கும் அளவுக்கு சூழல் மாறியது. இதனால் வெறுத்துப்போன பூங்குன்றன் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இப்படி யார் அணியிலும் சேராமல் அமைதிக்காத்து வந்தார். மேலும், சென்னையில் இருப்பதை தவிர்த்து சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தில் பெரும்பாலும் தங்கத் தொடங்கினார்.
சசிகலாவால் போயஸ் கார்டனுக்கு அழைத்துவரப்பட்டவர் பூங்குன்றன் என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குன்றனின் தந்தை புலவர் சங்கரலிங்கமும் ஜெயலலிதாவிடம் பணியாற்றி அவரது நன்மதிப்பை பெற்றவர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியுள்ளதை அடுத்து, கவிதை நடையில் பூங்குன்றன்அவரை வரவேற்றூள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள பூங்குன்றன்,
முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்; மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய், அயல்நாட்டிற்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி விவசாயி நானென்றாய், ஆங்கில நாட்டிற்கே சென்றாலும்; தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே ! தமிழனாய் உனை வரவேற்வேற்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
பூங்குன்றனின் திடீர் முதல்வர் பாசம் குறித்து விசாரித்ததில், டி.டி.வி.தினகரன் மீதான அதிருப்தியையும், வருத்தத்தையும் வெளிக்காட்டவே அவர் இ.பி.எஸ்.க்கு புகாழரம் சூடியதாக கூறப்படுகிறது.